சேரை தூக்கி எறிந்து நிர்வாகிகள் கூட்டத்தில் சண்டை.. ராமநாதபுரம் பாஜகவில் ஓயாத தகராறு.. என்னாச்சு?
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்ட நிலையில், பாஜக கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் - முன்னாள் நிர்வாகிகள் சேரை தூக்கி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக பொறுப்பாளர் ஒருவரின் ஓட்டுநர் கூட்டத்தினரைப் பார்த்து கூச்சலிட்டதாகத் தெரிகிறது. ஆத்திரமடைந்த பிற நிர்வாகிகள் ஓட்டுநர் மீது நாற்காலியை வீசித் தாக்கினர். தாக்குதலால் புதிய நிர்வாகிகளுக்கும் முன்னாள் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அறிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக இருந்த இ.எம்.டி.கதிரவன் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் கூண்டோடு கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தரணி ஆர்.முருகேசன் என்பவரை நியமனம் செய்தார் அண்ணாமலை. புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், புதிய மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் நிர்வாகிகள் வெளியேறும் சமயத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவனின் ஆதரவாளர் ஒருவர் திடீரென புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிற நிர்வாகிகள் அந்த நபர் மீது நாற்காலியை வீசித் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலால் புதிய நிர்வாகிகளுக்கும் முன்னாள் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்ட தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். நிர்வாகிகள் பாதுகாப்பாக கார்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். தகராறில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளரை போலீசார் அழைத்துச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications