ராமேஸ்வரத்தில் ஒரே குஷி.. துள்ளி துள்ளி வந்த "விருந்தாளி"..மகிழ்ச்சியில் இராமநாதபுரம் பாம்பன் மீனவர்
இராமநாதபுரம்: ராமேஸ்வர மீனவர்கள் நேற்றிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருக்கிறார்கள்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா பாம்பன் துறைமுகத்தில்?
வார விடுமுறை நாட்களில் ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும், தங்கள் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் கிளம்பி செல்வது வழக்கம்.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும், விசைப் படகுகளும் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், வாரஇறுதி விடுமுறையை கணக்கு செய்து, முன்கூட்டியே இவர்கள் மீன்பிடிக்க சென்றுவிடுவார்கள்..
கடலில் கிடைக்கும் அதிக அளவு மீன்களுடன் மகிழ்ச்சியுடன் கரை திரும்புவார்கள்.. அதனால்தான், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் தமிழக கடற்கரை மீன்பிடி சந்தைகளில், திருவிழா போல கூட்டம் அலை மோதும்..

மீன் வகைகள்: வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா போன்ற பெரிய வகை மீன்கள் உட்பட சங்கரா, நண்டு, இறால், கானாங்கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் வரை மொத்தத்தையும் அள்ளிக் கொண்டுவந்து, கரையில் கொட்டுவார்கள். இதில், சென்னை காசிமேடு முதல் ராமேஸ்வரம் பாம்பன் வரை இதே நிலைமைதான்.
இதில், ராமேஸ்வரம் மீனவர்களை பொறுத்தவரை, சமீபகாலமாகவே, அதிகளவில் மீன்கள் கிடைத்ததால், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தனர். இதனால், உரிய விலை கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றத்திலும் இருந்தனர்..
மீனவர்கள்: வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு மீன்களை விற்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுவதால்தான், அரசு சார்பில் ராமேசுவரம் பகுதியில் மீன் சேமிப்பு மற்றும் பதனிடும் கிடங்கு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் விசைப்படகு வலையில் 2 டன் கட்டா மீன்கள் சிக்கியதால், மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்...
கடந்த 4ம்தேதி, பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்றனர்.. மீன்வளம் நிறைந்த மன்னார் வளைகுடா கடலில் மீன்களை பிடித்தனர்.. பிறகு, நேற்று காலை மீனவர்கள் அனைவருமே பாம்பன் கரைக்கு திரும்பினார்கள். அப்போது, அவர்களது படகில் விலை உயர்ந்த வவ்வால், சீலா, பாறை மீன்கள் ஏகப்பட்டது சிக்கியிருந்தது.
விசைப்படகு: இதில் ஒரு விசைப்படகில் மட்டும், 2 டன் கட்டா மீன்கள் சிக்கின.. இதனை மீன்பிரியவர்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்தனர்.. ஆனால், இந்த மீனுக்கு ருசி அவ்வளவாக இருக்காது.. அதனால், எப்போதுமே தமிழக மீன் மார்க்கெட்டுகளில், இந்த மீனை பலரும் விரும்பி வாங்க மாட்டார்கள்.. எனவே, எப்போது கட்டா மீன்கள் கிடைத்தாலும், அதனை கருவாடாக மீனவர்கள் விற்றுவிடுவார்கள்.
இந்த கட்டா மீன்களை மஞ்சள், உப்பு தடவி பக்குவமாக கருவாடாக்கினால் சீலா கருவாட்டை போல வாசனை வருமாம்.. கேரளம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களுக்கும், ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளுக்கும் இந்த கட்டா மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.. அதுபோலவே, நேற்று கிடைத்த 2 டன் கட்டா மீன்களையும் கருவாடாக விற்க பாம்பன் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மகிழ்ச்சி: கரைக்கு மீன்களை கொண்டுவந்ததுமே, பாம்பன் வியாபாரி ஒருவர், இவைகளை கிலோ ரூ.130க்கு வாங்கி கொண்டு போனாராம்.. இந்த கட்லா மீன்களை உப்பில் உலர்த்திபோட்டு, கேரளா மார்க்கெட்டுக்கு கருவாடாக தயார் செய்து அனுப்ப உள்ளதாக அந்த வியாபாரி சொல்லிவிட்டு போயிருக்கிறார்.. எனினும், ஒரே படகில், ஒரே நாளில், 2 டன் கட்டா மீன் சிக்கியதால் ராமேஸ்வர மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications