நான் பார்க்கும் பணி என்று எனக்கு மகிழ்ச்சி தரவில்லையோ அன்று ஓய்வு! ஆளுநர் ரவியின் பேச்சால் பரபரப்பு!
ராமநாதபுரம்: நான் பார்க்கும் பணி என்று எனக்கு மகிழ்ச்சி தரவில்லையோ அன்று பணியை முடித்துக்கொள்வேன் என ஆளுநர் ரவி பேசியிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ரவி இவ்வாறு கூறியிருப்பது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று ராமநாதபுரம் சென்றடைந்த ஆளுநர் ரவியை மாவட்ட ஆட்சித் தலைவர் முறைப்படி வரவேற்றார். அதைத் தொடர்ந்து கேந்திரியா வித்யாலயா பள்ளிக்கு சென்ற அவர் மாணவர்கள் மத்தியில் உரையாடும் போது, அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
வாழ்வில் எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் தளராமல் இலக்கை நோக்கி பயணித்தால் நிச்சயம் முன்னேறலாம் எனக் கூறினார். விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிர முடியும் எனக் கூறி விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ரவி, தாம் பார்க்கும் பணி என்று தனக்கு மகிழ்ச்சி தரவில்லையோ அன்று பணியை முடித்துக்கொள்வேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தன்னைப் பொறுத்தவரை ஒழுக்கம் மிக முக்கியமானது என்றும் மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் பெற்றோரை மதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடகங்களை மாணவ சமுதாயத்தினர் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், விளையாட்டு நேரத்தை சமநிலைப்படுத்தி கடினமாக படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அதேபோல் ஆரோக்யத்திலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனப் பேசிய ஆளுநர் ரவி, நன்றாக சாப்பிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் தேசத்தை பெருமைப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பள்ளி விழாக்கள் முடிந்தவுடன் ராமநாதபுரத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த ஆளுநர் ரவி, தேவிப்பட்டணத்தில் உள்ள கடற்கரைக்கு செல்லவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications