வாடகைக்கு எடுத்த கார்களை அடகு வைத்து உல்லாச வாழ்க்கை.. பலே கில்லாடிகள் கைது..!
இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் 16 கார்களை வாடகைக்கு எடுத்து அடகு வைத்து, சூதாட்டம் மது என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த அண்ணன் தம்பி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார் ஒரு கோடி மதிப்புள்ள கார்களை மீட்டுள்ளனர்.
இராமநாதபுரம் சிகில் ராஜவீதியைச் சேர்ந்தவர்கள் இளையராஜா, கார்த்திக். அண்ணன் தம்பிகளான இருவரும் சுப்பிரமணி என்பவருடன் கூட்டு சேர்ந்து கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரின் மகன்களான இளையராஜாவும், கார்த்திக்கும் பல வண்ணங்களில், விலை உயர்ந்த கார்களில் அப்பகுதியில் வலம் வந்துள்ளனர்.
மேலும் கைகளில் வாட்ச், மோதிரம் விலை உயர்ந்த செல்போன்களுடன், ஒய்யாரமாக வலம் வந்த இருவரும், கட்டுக்கணக்கான பணத்துடன் சூதாடியும், உயர்ரக மதுகூடங்களில் மது அருந்துவதோடு, வீட்டில் தங்காமல் விடுதிகளில் அறை எடுத்து தங்குவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஊரில் இவர்களது அலப்பறையை தாங்க முடியாமல் வெறுப்பாய் சுற்றியுள்ளனர் அவ்வூர் மக்கள்.

வாடகைக்கு கார்கள் எடுத்து மோசடி
இந்தநிலையில், இராமநாதபுரம் வம்பன் சந்து பகுதியை சேர்ந்தவர், முனியசாமி . இவர் ஒப்பிலான் மாரியூர் பகுதியை சேர்ந்த யாசின் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கார் வாங்கி ஓட்டி வந்துள்ளார். அவரிடம் அக்டோபர் மாதம் 3-ந்தேதி வந்து வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளனர் இளையராஜா கூட்டணியினர்.. அவர்களின் பேச்சை நம்பிய முனியசாமி கார் வாடகைக்கு கொடுத்துள்ளார். இதற்கான வாடகையை 2 தவணைகளில் கொடுத்துள்ளனர். இதனால் நம்பிக்கை ஏற்பட்ட நிலையில் மேலும் வாடகைக்கு கார்கள் ஏற்பாடு செய்து கொடுத்தால் உரிய பணம் தருவதாக கூறியுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்கள்
இதனை தொடர்ந்து முனியசாமி அவருக்கு தெரிந்தவர்களிடம் கூறி கார்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்த கார்களை மேற்கண்ட கார்த்திக்கின் அண்ணன் இளையராஜாவிடம் வழங்கி, வாடகைக்கு விட கொடுத்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று கார்களுக்கான வாடகையை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் கார்களின் உரிமையாளர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இந்த சூழ்நிலையில் கார் உரிமையாளர் ஒருவர், மேற்கண்டவர்களிடம் வாடகைக்கு விட்ட தனது கார் மதுரையில் விற்பனைக்கு உள்ளதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கார்களை அடகு வைத்து உல்லாசம்
இதுகுறித்து விசாரித்தபோது இளையராஜா, அவருடைய தம்பி கார்த்திக், சுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த காரை மதுரையில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதும், பணத்தை திரும்ப கொடுக்காததால் கார் ஏலத்துக்கு வந்திருப்பதும் அதன் உரிமையாளருக்கு தெரியவந்தது. இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் பலரிடம் இதுபோன்று கார்களை வாடகைக்கு வாங்கி அதனை மதுரை செல்லூர் பகுதியில் அடகு வைத்துவிட்டு, மது குடித்து சூதாட்டம் விளையாடி உல்லாசமாக பொழுதை கழித்துள்ளனர். இதனை தொடர்ந்து காரின் உரிமையாளர்கள், மேற்கண்டவர்கள் மீது ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளையராஜா உள்பட 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மோசடி ஈடுபட்டவர்கள் கைது
இவர்களிடம் நடத்திய விசாரணையில் மொத்தம் 16 பேரிடம் இதுபோன்று கார்களை வாங்கி மதுரையில் ரூ.1 கோடி வரை அடகு வைத்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவஞானபாண்டியன், முத்துராமன் ஆகியோர் விரைந்து சென்று கார்களை பறிமுதல் செய்து ராமநாதபுரம் கொண்டு வந்தனர். மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை, என ஒய்யாரமாக வலம் 3 பேரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அங்கு அரசாங்க பணத்தில் களி தின்று கம்பி எண்ணி வருகின்றனர்..












Click it and Unblock the Notifications