கச்சத்தீவு.. இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்னர் ராமநாதபுரம் வந்த இந்திரா காந்தி- புது தகவல்!
ராமநாதபுரம்: இலங்கைக்கு கச்சத்தீவை கொடுப்பதற்கு முன்னர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்துக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வருகை தந்து ராஜா ராமநாத சேதுபதியிடம் ஆலோசனை நடத்தியதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் பாஜகவால் பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ், திமுக கூட்டு சேர்ந்து கொடுத்துவிட்டது; இந்தியாவின் நலன்களை விட்டுக் கொடுத்தவைதான் திமுகவும் காங்கிரஸும் என பாஜக பிரசாரம் செய்கிறது. இதனை திமுகவும் காங்கிரஸும் திட்டவட்டமாக மறுக்கின்றன.

கச்சத்தீவுக்குப் பதிலாக வெட்ஜ் பேங்க் எனும் தீவை பெற்றோம் என விளக்கம் தருகிறது காங்கிரஸ். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கவே கூடாது என 1960களில் இருந்தே எதிர்ப்பது திமுக; 1974-ல் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமே போட்டோம் என்கிறது திமுக.
கச்சத்தீவு என்பது தமிழ்நாட்டின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் சமஸ்தானத்தின் தற்போதைய ராணி லெட்சுமி நாச்சியார், பிபிசி தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனுக்காக இலங்கைக்கு அப்போதைய மத்திய அரசு கச்சத்தீவை கொடுத்தது. இதற்கு ராமநாதபுரம் சமஸ்தானம் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானது என பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பேசுவதும் மகிழ்ச்சிதான்.
கச்சத்தீவு ஒரு கட்டத்தில் மரைக்காயர்களுக்கு குத்தகைக்கும் ராமநாதபுரம் சமஸ்தானத்தால் கொடுக்கப்பட்டது. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்னர் ராமநாதபுரத்துக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் வருகை தந்தார். ராமநாதபுரம் ராஜாவாக இருந்த ராமநாத சேதுபதியுடன் இந்திரா காந்தி பேச்சுவார்த்தையும் நடத்தினார். கச்சத்தீவு மக்கள் நலனுக்காகவே இலங்கைக்கு தரப்படுவதாக இந்திரா காந்தி கூறினார். இதனால் ராமநாதபுரம் ராஜா ராமநாத சேதுபதி எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
கச்சத்தீவு கொடுக்கப்பட்டதால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்கு மத்திய அரசு முயற்சித்தால் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் சார்பாக நான், என் மகன் நாகேந்திர சேதுபதி உதவுவோம் . இவ்வாறு ராணி லெட்சுமி நாச்சியார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications