அச்சாரம்.. ‘ஆபரேஷன் சவுத்’.. தம்பியை அனுப்பி ஃபீல்ட் ரிப்போர்ட்? - தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி!
ராமநாதபுரம் : தேவர் ஜெயந்தி நிகழ்வு ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டியாக மாறியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி தேவர் ஜெயந்தியில் பங்கேற்க இருப்பதாக ஒரு தகவல் சுழன்றடித்து வருகிறது.
பிரதமர் மோடி தேவர் குருபூஜை நிகழ்வுக்காக ராமநாதபுரம் மாவட்ட பசும்பொன் வர இருப்பதாகவும், விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியின் தம்பி தாமோதர்தாஸ் பங்கஜ் மோடி சமீபத்தில் தேவர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய நிலையில், பிரதமர் மோடியின் இந்த வருகை அமைந்திருக்கிறது.
பாஜக, தென் மாநிலங்களை குறிவைத்து தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் மோடியின் இந்த நகர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தேவர் குருபூஜை நிகழ்வில் பிரதமர் மோடி?
பல்வேறு மாநிலங்களிலும், தங்கள் பலத்தை அதிகரிக்க, அப்பகுதிகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களுக்கு சிலை அமைப்பது, பிறந்தநாள் விழாக்களை விமரிசையாக கொண்டாடுவது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது பாஜக. அந்தவகையில், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் பல்வேறு சமுதாய தலைவர்களின் விழாக்களை சிறப்பாக நடத்தி வருகிறது பாஜக. இந்நிலையில் தான் வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் பரபரவென சிறகடித்து வருகின்றன.

டெல்லியில் இருந்து ஆர்டர்
முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை வரும் அக்., 30ஆம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கிறது. பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி தமிழகத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்று, பசும்பொன் கிராமத்துக்கு சென்று, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு, டெல்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடியின் தம்பி
பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு வரவிருப்பதற்கு முன்பே ஒரு சிக்னலையும் கொடுத்தார் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர். அதாவது, பிரதமர் மோடியின் இளைய சகோதரர் தாமதர்தாஸ் பங்கஜ் மோடி, சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்று, அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

ராமேஸ்வரம் விசிட்
பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடி, சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தார். முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் கிராமத்திற்கு சென்ற அவர், அண்மையில் திருமணம் நடந்த பாஜக மாநில இளைஞரணி செயலர் ராம்குமார் - தமிழ்வாணி தம்பதியரை வாழ்த்தினார். மேலும், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மோடிக்கு ரிப்போர்ட்
பங்கஜ் மோடி, அப்பகுதியின் பாஜக தலைவர்களைச் சந்தித்ததோடு, தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும் சந்தித்ததாக கூறப்படுகிறது. தமிழக பாஜகவினர் ஏற்கனவே, தேவர் குருபூஜையில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தான் பங்கஜ் மோடியின் இந்த விசிட் அமைந்தது. அவர் அப்பகுதியின் அரசியல் சூழலை ஆராய்ந்து, பிரதமர் மோடியின் இந்த விசிட் லோக்சபா தேர்தலுக்கு உதவக்கூடும் என ரிப்போர்ட் செய்ததாகவும், அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடி இங்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டே அச்சாரம்
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி மற்றும் 59வது குருபூஜை விழா கடந்த ஆண்டு நடைபெற்றபோது தேவர் ஜெயந்தி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்நாளில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவு கூறுகிறேன். துணிச்சலும் கனிவான உள்ளமும் கொண்டவர். பொதுநலன் மற்றும் சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்று தேவரைப் புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications