எங்களுக்கு ‘தர’ மாட்டீங்களா? ஓ.பன்னீர்செல்வத்தை சுத்துப் போட்ட பாஜக! ரிசல்டே வரல அதுக்குள்ளயா?
இராமநாதபுரம்: பாஜக கூட்டணியில் இடம் பெற்றும் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது அந்த தொகுதியில் பாஜகவினரின் எதிர்ப்பை பெற்றிருக்கிறார். நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவினர் அவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை கூட்டணிக்குள் ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுகவில் ஒரு காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிகாரம் பொருந்திய நபராகவும் முகம் தெரிந்த முகமாகவும் இருந்தவர் .பன்னீர்செல்வம். தேனியில் சாதாரணமாக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி, தமிழகத்தின் மிகப்பெரும் பதவியான முதலமைச்சர் பதவியை மூன்று முறை வகித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், ஐவர் அணியில் மூத்தவராகவும், அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சியிலும் பொருளாளர் பதவியை வகித்தார். ஜெ., மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வு அஸ்தமனத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
ஓ.பன்னீர்செல்வம்: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற போதிலும் சசிகலாவின் முதல்வர் கனவு அதற்கு தடை போட்டது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியை மிரட்டி ராஜினாமா செய்ய சொல்கிறார்கள் என ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினர். அதற்குப் பிறகு கூவத்தூர் விவகாரம், சசிகலா சிறைக்கு சென்றது, டிடிவி தினகரன் வெளியேற்றம், எடப்பாடியோடு மோதல், பின்னர் இணக்கம் என அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது.
எடப்பாடி பழனிசாமி: கட்சிக்கு ஓபிஎஸ் ஆட்சிக்கு இபிஎஸ் என டீலிங் பேசி நான்கு வருட ஆட்சியை நிறைவு செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பிறகு கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட தொடங்கினர். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது பொதுக் குழு கூட்டத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி விரட்டி அடிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பெருகி போயினர். இதை அடுத்து பல சட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிமுகவிற்கு மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தால் வர முடியவில்லை.
மக்களவை தேர்தல்: அதே நேரத்தில் பாஜக தலைமையுடன் நெருக்கம் காட்டி வந்தார் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவரை சந்திக்கும் அளவுக்கு அவருக்கு நெருக்கம் இருந்தது. அதை அடுத்து தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்த அதிமுகவோ வேறு கூட்டணியை அமைத்தது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனக்கான செல்வாக்கை நிலை நிறுத்த இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதன் காரணமாக சமுதாய வாக்கு வங்கி தொண்டர்கள் பலம் என சுயேச்சை சின்னத்தில் களமிறங்கி இருக்கிறார்.
தேர்தலில் சிக்கல்: அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே ஏராளமான நபர்கள் களத்தில் குதித்தனர். ஐந்து பேர் ஒரே பெயரில் போட்டியிட்டது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இது எல்லாம் எடப்பாடி பழனிச்சாமியின் ஏற்பாடுதான் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது ஒரு வழியாக தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கைக்காக கட்சிகள் தங்கள் முகவர்களை தயார் செய்து வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை: அந்த வகையில் நேற்று ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது தான் பிரச்சனை எழுந்தது. அந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் யாருக்கும் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
பாஜகவினர் வாக்குவாதம்: இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென நாங்கள் சிறப்பாகவே பணி செய்தோம்.. ஆனால் ஏற்கனவே அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.. நாங்கள் வேலை செய்யவில்லையா? நாங்கள் கூட்டணியில் இல்லையா? என கூறி ஓ.பன்னீர்செல்வத்தை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத ஓ.பன்னீர்செல்வம் அங்கு இருந்து நிர்வாகிகளிடம் பாஜக நிர்வாகிகளுக்கு ஏன் அடையாள அட்டை வழங்கவில்லை என கேட்டதோடு, நீங்கள் வெற்றிக்கு உழைத்து இருக்கிறீர்கள் கண்டிப்பாக உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என பேசி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பரபரப்பு: இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பால் பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கை அவர்கள் புறக்கணிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது வாக்கு எண்ணிக்கையின் போது சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர் உள்ளூர் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications