ஜாதியை சொல்லி திட்டினார்.. தூக்கமே வரலை! அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அலுவலர் புகார்! என்ன நடந்தது?
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ராஜ கண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்துள்ளது. தன்னை அமைச்சர் ஜாதி சொல்லி மீண்டும் மீண்டும் திட்டியதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதி ஒன்றிய சேர்மன் தருமனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. தருமன் அதிமுகவை சேர்ந்தவர்.
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் வீட்டிற்கு சென்ற ராஜேந்திரனை, அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஜாதி ரீதியாக குற்றஞ்சாட்டியதாக புகார் எழுந்துள்ளது.
பஸ் ஸ்டிரைக்... ஆப்சென்ட் போட்டு சம்பளப்பிடித்தம் செய்வோம் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை
பேட்டி
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னை வீட்டிற்கு வர சொன்னார். அவரை பார்க்க வீட்டிற்கு சென்ற போது.. அவருக்கு மரியாதை செய்தும் அவர் என்னை ஜாதி சொல்லி திட்டினார். எஸ்சி.. எஸ்சி என்று சொல்லி மீண்டும் மீண்டும் திட்டினார் . நான் சொல்வதை எதையும் நீ கேட்க மாட்டாயா.. சேர்மேன் சொன்னால் மட்டும்தான் கேட்பாயா என்று கேட்டார்.
இடமாற்றம்
உன்னை இடமாற்றி காட்டட்டுமா.. என்று கூறி என்னை ஜாதி ரீதியாக 6 முறை எஸ்சி என்று கூறி திட்டினார். எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதில் என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு தூக்கம் இல்லை. சாப்பிட முடியவில்லை. இது பற்றி ஆட்சியர், துணை ஆட்சியரிடம் பேச முடியவில்லை. அதனால் இப்போது செய்தியாளர்களை சந்தித்து என் கஷ்டத்தை சொல்கிறேன் என்று முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
என்ன மோதல்
முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இருக்கும் ராஜேந்திரன், அங்கு அமைச்சரின் பேச்சை கேட்காமல் சேர்மேனான அதிமுகவை சேர்ந்த தர்மன் பேச்சை கேட்டதாக திமுகவினர் புகார் வைக்கிறார்கள். கடந்த 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தருமன் இன்று வென்றவர். அதன்பின் திமுகவின் ராஜகண்ணப்பன் இங்கு எம்எல்ஏ ஆகி, அமைச்சரானாலும் , ராஜேந்திர அவரின் உத்தரவுகளை மதிக்காமல் தருமன் உத்தரவை கேட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்ன நடக்கும்
தன்னை மட்டும் இன்றி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அன்பு கண்ணன் என்பவரையும் அமைச்சர் திட்டியதாக ராஜேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். ஆனால் அன்பு கண்ணன் இதுவரை இதில் புகார் எதையும் தெரிவிக்கவில்லை. இதில் ராஜேந்திரன் எஸ்சி பிரிவை சேர்ந்தவர் என்பதால் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜேந்திரன் சொல்வது உண்மையா? அமைச்சர் உண்மையில் இப்படி அவரை அழைத்து திட்டினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போராட்டம்
இந்த சம்பவம் முதுகுளத்தூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஒன்றிய அலுவலகம் முன் அலுவலக ஊழியர்கள் இன்று காலை போராட்டம் செய்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இவர்கள் போராட்டம் செய்தனர். அதேபோல் ராஜேந்திரன் தேவேந்திர குல வேளாளர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் அந்த ஜாதியை சேர்ந்த சங்கத்தினர் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புகார் பற்றி அமைச்சர் தரப்பு இதுவரை விளக்கம் எதையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.