பெட்ரோல் குண்டு வீச்சு.. அண்ணாமலை கடிதம்.. தமிழக அரசிடம் அறிக்கை கேட்பு.. மத்திய அமைச்சர் தகவல்
ராமநாதபுரம்: ‛‛தமிழகத்தில் நடந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது'' என மத்திய அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா கூறினார்.
தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.
இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கார் எரிப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் பதற்றம்
கோவை, ஈரோடு, சேலம், சென்னை, மதுரை உள்பட மாவட்டங்களில் பாஜக பிரமுகரின் வீடு, கடைகளில் பெட்ரோல், டீசல் வீசப்பட்டுள்ளது. இதனால் தமிழக முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்திலும் பாஜக ஆதரவாளான ராமநாதபுரம் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் கார்கள் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு சம்பவம் நடந்தது அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பானுபிரதாப் சிங்
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த மத்திய சிறுகுறு தொழில்துறை இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பா.ஜ.க ஓ.பி.சி அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசிடம் அறிக்கை
தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மட்டும்தான் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. தமிழகம் மட்டுமல்ல கேரளா, மத்திய பிரதேதம் என நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் வீடுகளை தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

பாஜக தலைவர் கடிதம்
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தான் தமிழக அரசிடம் இருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications