‛கடவுள்’ ராமருடன் தொடர்பு.. தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் தரிசனம்.. பின்னணி இதுதான்
ராமநாதபுரம்: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்த நிலையில் இன்று அவர் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு சென்று ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் அரிச்சல் முனையை பார்வையிட்டதோடு, கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார். இந்த இடங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்தார். நேற்று முன்தினம் சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். அதன்பிறகு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார் பிரதமர் மோடி.

இதையடுத்து 2வது நாளான நேற்று பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமருடன் தொடர்புடைய கோவிலில் தரிசனம் செய்ய தொடங்கினர்.
அதன்படி நேற்று பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். முன்னதாக அங்குள்ள 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி புனித நீராடினார். இரவில் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ஓய்வெடுத்தார். இதையடுத்து இன்று காலையில் அவர் ராமேஸ்வரத்தில் இருந்து காரில் அரிச்சல் முனைக்கு புறப்பட்டார்.
பிரதமர் மோடி காரில் பயணித்தபோது ஏராளமான மக்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர். இதில் பூரித்துப்போன பிரதமர் மோடி அவர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார் காலை 9.30 மணிக்கு ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாக கூறப்படும் அரிச்சல் முனையை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடி சென்றதை தொடர்ந்து கோதண்டராமருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று சென்ற 2 இடங்களும் கடவுள் ராமருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இடங்களாகும். நாளைய தினம்
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பிரதமர் மோடி ராமர் தொடர்பான இடங்களுக்கு சென்று வருகிறார். அதன்படியே அவர் இன்று அரிச்சல்முனை மற்றும் கோதண்டராமர் கோவிலுக்கு சென்றார்.
அரிச்சல் முனை என்பது ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் இடமாகும். இங்கிருந்து தான் ராமர் பாலம் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் கோதண்டராமர் கோவிலும் ராமருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதாவது கோதண்டராமன் என்ற பெயருக்கு வில்லுடன் உள்ள ராமர் என்ற பொருள் உள்ளது.
மேலும் இங்கு தான் ராவணன் தம்பி விபீஷணன் முதன்முதலில் ராமரை சந்தித்து அடைக்கலம் கேட்டாராம். அதாவது ராவணன் தம்பி விபீஷணன் ராமருடன் சேர்ந்த இடம் தான் இதுவாகும். மேலும் ராமர், வீபீஷணனுக்கு இலங்கை மன்னராக முடிசூட்டு விழாவை நடத்தியதும் இங்கு தான் என கூறப்படுகிறது. இதனால் தான் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று கோதண்டராமர் கோவிலில் தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications