நோ ப்ராப்ளம்.. “ஹிஜாப்” அணிந்து ஸ்கூல் வரலாம்! பெற்றோர்களிடமே சொன்ன அரசு பள்ளி தலைமை ஆசிரியை
ராமநாதபுரம்: அரசுப் பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று சொன்ன பள்ளியின் தலைமையாசிரியர் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல மாநில அரசு தடை விதித்ததை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் கிராமத்தில் ஹிஜாப் பிரச்சனை வெடித்துள்ளது. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஹிஜாப் அணிய தலைமை ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதிதாக பள்ளியில் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்று இருக்கிறார்.
ஹிஜாப் அணிந்து வருவதை பார்த்தால் சக மாணாக்கர்களுக்கு பன்முகத் தன்மை பற்றி புரியுமே- உச்சநீதிமன்றம்
ஹிஜாப் அணிய எதிர்ப்பு
அவரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி அவரது தாயிடம் கூறி இருக்கிறார். உடனே மாணவியின் தாய் தலைமை ஆசிரியரை சந்தித்து கர்நாடகா சம்பவத்தை சொல்லி விளக்கம் கேட்டு உள்ளார்.
தலைமை ஆசிரியை
அதற்கு அந்த தலைமை ஆசிரியை, "தனியார் பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதிப்பார்கள். இது அரசுப் பள்ளி. இந்த பிரச்சனைக்கு பிறகு ஹிஜாப் அணிய சொல்லி எந்த உத்தரவும் வரவே இல்லை. இது நான் கொண்டு வந்த பழக்கம் இல்லை. எனக்கு முன்பே இதுதான் நடைமுறை. என்னால் இதை மாற்ற முடியாது." என்றார்.
தாய் கேள்வி
"தமிழ்நாடு அரசு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதை நிரூபித்தால் மாணவியை பள்ளிக்குள் அனுமதிப்பீர்களா?" என மாணவியின் தாய் தலைமை ஆசிரியரிடம் கேட்கிறார். அதற்கு அவர், "நான் அட்மிஷன் போடும்போதே இதை சொல்லி யோசிக்க சொன்னேன். அட்மிஷன் போட்ட பிறகு இதை செய்ய முடியாது." என்றார்.
சம்மதித்த தலைமை ஆசிரியை
இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியரை தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "ஹிஜாப் பிரச்சனை சரி செய்யப்பட்டு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம் என்கின்ற செய்தியை தலைமை ஆசிரியர் அவர்கள் முறையாக பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து உள்ளார்கள்." என்று தெரிவித்துள்ளனர்