என்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர்
Recommended Video
ராமநாதபுரம்: திருவாடானை அருகே மங்களக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், இளைஞர் ஒருவர் தன்னை 6 மாதகாலத்திற்கு வட்டாட்சியராக நியமிக்க வேண்டும் என மனு அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை திகைக்க வைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்வு கூட்டங்களில் விநோதமான முறையில் சிலர் மனு அளிப்பது தொடர்கதையாக உள்ளது. ஏற்கனவே முதியவர் ஒருவர் பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவை மணம் முடிக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் அந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் அங்கு அதேபோல் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
கீழ்குடி கிராமத்தை சேர்ந்த விநோத் என்ற இளைஞர், திருவாடானை வட்டாட்சியராக தன்னை 6 மாதத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நியமித்தால் ஊழலை ஒழித்துக்காட்டுவேன் எனவும் மனு ஒன்றை தயார் செய்து அதை ஆட்சியர் வீர ராகவ ராவ் கையில் அளித்தார். அதை பிரித்துப் பார்த்த ஆட்சியருக்கு தலைசுற்றல் வராத குறைதான். சரி தம்பி செய்துவிடலாம் எனக் கூறி அந்த இளைஞரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
விநோத் அளித்த மனுவில், திருவாடானை தாலுக்காவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் பெருவிகிவிட்டதாகவும், சான்றிதழ் பெறுதல், பட்டா மாற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அரசு அலுவலர்கள் லஞ்சப் பணம் கேட்பதாகவும், இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விநோத்தை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்ற ஒரு வருடமாக முயற்சி செய்து வருவதாக கூறினார். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பணத்தை எதிர்பார்த்து தன்னை அலைக்கழித்ததால், இதனை ஆட்சிரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் தான் அந்த மனுவை அளித்ததாக தெரிவித்தார்.