இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு..!
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களை நடுக்கடலில் இருந்து இலங்கை கடற்படை விரட்டியடித்த நிகழ்வு மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை பார்த்ததுடம் படகுகளை எடுத்துக்கொண்டு உடனடியாக செல்ல வேண்டும் என எச்சரித்தனர்.

மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை எடுப்பதற்கு கூட கால அவகாசம் கொடுக்காமல் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்ட இலங்கை கடற்படையினர், துப்பாக்கியால் கடலை நோக்கி சுட்டு தமிழக மீனவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் கடலில் வீசிய வலைகளை கூட முழுமையாக எடுக்கமுடியாமல் அறுத்துவிட்டு கரை திரும்பியுள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள். இந்த நிகழ்வு மீனவர்களிடையே கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை வதைக்கும் செயலில் இலங்கை கடற்படை ஈடுபடுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே பயனற்ற பழைய பேருந்துகளை நடுக்கடலில் இறக்கி தமிழக மீனவர்களுக்கு இடையூறு கொடுத்து வருகிறது இலங்கை.
இதனிடையே இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என மீனவ சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications