தயாராகுது இராமநாதபுரம்.. தேவர் குருபூஜைக்காக வெயிட்டிங்! கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட நிர்வாகம்..!
இராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இம்மாத இறுதியில் நடக்கும் நிலையில், தற்போதே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
தென் மாவட்டங்களில் அக்டோபர் மாதம் வந்தாலே பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. தேவர் குருபூஜை மருது சகோதரர்கள் விழா என தென்மாவட்டங்கள் திருவிழா கோலம் பூண்டு விடும்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனார் என அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவானது அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் கூட்டம் என இரண்டு நாட்களும் பசும்பொன் கிராமமே களை கட்டி காணப்படும். திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி அந்த கட்சியின் பிரதான தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள். தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கும் நிலையில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் அங்கு வந்திருக்கிறார்.
இதேபோல தமிழக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். அஞ்சலி நிகழ்ச்சி என்பதை தாண்டி அப்பகுதி மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கடவுள் போலவே பார்க்கின்றனர். விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து அவரை தரிசிப்பதும் வழக்கம்.
அந்த வகையில் வருகின்ற 30ஆம் தேதி தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் துறை, அதிகாரிகள், மாவட்ட காவல் துறையினர், அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 163(1) தடை உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவிற்கு வாடகை வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ட்ராக்டர் ,சரக்கு வாகனம் உள்ளிட்ட திறந்த வெளி வாகனங்களில் வர தடை விதிக்கப்படுகிறது.
மேலும் சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டும் ராமநாதபுரம் பசும்பொன் எல்லைக்குட்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பாஸ்களை பெற வேண்டும். மேலும் சொந்த வாகனத்தை வாடகைக்காக பயன்படுத்தக் கூடாது. தொடர்ந்து தேவர் ஜெயந்திக்குச் செல்லும் வழியில் பட்டாசு வெடிக்கக் கூடாது. பிற மாவட்டங்களில் இருந்து பசும்பொன் வருபவர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் முறையான பாஸ் பெற வேண்டும். குறிப்பிட்ட வழித்தடங்களில் அக்டோபர் 29ஆம் தேதியும் 30ஆம் தேதியும் கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும், விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications