ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமல்.. கலெக்டர் வெளியிட்ட கட்டுப்பாடு
ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிறப்பித்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 அன்று அனுசரிக்கப்படுவது வழக்கம். இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு முக்கியமான தலைவர் ஆவார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ம் தேதி மரியாதை செலுத்துவார்கள். செப்டம்பர் 11ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதில் இருந்தும் பரமக்குடிக்கு ஏராளமான மக்கள் சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வருவார்கள். தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.

இதேபோல் தேசம் தெய்வீகம் எனது இரு கண்கள் என்று கூறி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழா மற்றும் நினைவு நாள் ஒரு நாளான அக்டோபர் 30ம் தேதி இருக்கிறது. அந்த நாளில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 அன்று பசும்பொன்னில் கொண்டாடப்படுகிறது. குரு பூஜையில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வருவார்கள். அவர்கள் சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வருவார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளின் போது, கடந்த காலக்கட்டத்தில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. இதனால் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதற்காகவே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும்.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வெளியிட்ட உத்தரவின்படி, தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (9-ந்தேதி) காலை முதல் 2 மாத காலம் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் தடை உத்தரவு அமலில் உள்ள நாட்களில் நாளை (9-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications