சோனியாவிற்கு ராகுல் PM ஆகனும், ஸ்டாலினுக்கு உதயநிதி CM ஆகனும்.. "இந்தியா" பற்றி கவலையில்லை: அமித்ஷா
ராமநாதபுரம்: சோனியா காந்திக்கு ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற விருப்பம் தான் உள்ளது. அவர்களுக்கு "இந்தியா" பற்றி கவலை இல்லை என்று அமித்ஷா கடுமையாக விமர்சித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்னாமலை, "என் மண் , என் தமிழகம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையை இன்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தொடங்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமித்ஷா பேசும் போது வாரிசு அரசியல் குறித்தும் கடுமையாக சாடினார்.

அமித்ஷா பேசியதாவது:- பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் சாதியவாதம், குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டி வருகிறார். எதிர்கட்சிகள் இப்போது உருவாக்கி இருக்கிற 'இந்தியா' கூட்டணி, கடந்த கால யுபிஏ கூட்டணி தான். பல ஆயிரம் கோடி ஊழல் செய்தவர்கள் இப்போது மீண்டும் ஒன்று கூடி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் இணைந்து மக்களிடையே ஓட்டு கேட்க சென்றால் நீங்கள் செய்த ஊழல் தான் மக்களுக்கு நினைவிற்கு வரும். 2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல், இஸ்ரோவில் செய்த ஊழல் என சொல்லிக்கொண்டே போகலாம். மக்கள் இதையெல்லாம் மறக்க மாட்டார்கள். எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து உருவாக்கி இருக்கிற கூட்டணி, நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக இல்லை. தங்களது குடும்பத்தை வளர்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
சோனியா காந்திக்கு ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். முதல்வர் மு.கஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வர் ஆக்க வேண்டும். லாலு பிரசாத் யாதவிற்கு தேஜஸ்வி யாதவையும், மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகனை முதல்வராக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. மகராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு அவருடைய மகனை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
இவர்களுக்கு இந்தியாவையோ, தமிழகத்தையோ வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. குடும்பத்தினை வலுப்படுத்த நினைக்கிறார்கள். தமிழக அரசாங்கம், ஒரு ஊழல் மிகுந்த ஒரு அரசாங்கம். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் எது என்றால் அது தி.மு.க. அரசாங்கம் தான். பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ட்விட் போட்டாலே, தி.மு.க. ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது.
அண்ணாமலை அனைத்து சட்டசபைக்கும் தொகுதிக்கும் பாத யாத்திரை செல்ல போகிறார். அப்படியென்றால் இந்த ஆட்சிக்கு என்னனென்ன நடக்க போகிறது என்பதனை பொறுத்திருந்து பாருங்கள். தி.மு.க. ஆட்சி, குற்றம் புரிவோரின் ஆட்சி. இது கொள்ளையடிக்கும் மாஃபியா அரசாங்கமாக உள்ளது. ஏழை மக்க்களுக்கான விரோத அரசாக இருக்கிறது.
காங்கிரசும், தி.மு.க.வும் சேர்ந்து தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை. வெறும் ஊழல் தான் செய்தார்கள். நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? அண்ணாமலை என் மண், எண் மக்கள் யாத்திரை 169 நாட்களில் முடிக்கும் போது, நாடாளுமன்ற தேர்தல் வந்து விடும். 2024-ம் ஆண்டு மீண்டும் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார். அப்போது தமிழகத்திலும் மாற்றம் நடக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications