வைகாசி மாத சர்வ அமாவாசை! அக்னிதீர்த்த கடற்கரையில் மக்கள் வெள்ளம்! புனித நீராடினால் இவ்வளவு நன்மைகளா?
ராமநாதபுரம் : வைகாசி மாத சர்வ அமாவாசையையொட்டி ராமதநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசை தினத்தன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் இன்று வைகாசி மாதம் சர்வ அமாவாசை மற்றும் கோடை விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

அக்னி தீர்த்த கடற்கரை
இன்று காலை அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பக்கதர்கள் அங்குள்ள புரோகிதர்களிடம் எள்ளு பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதே போல் வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை மணலில் சிவ லிங்கம் செய்து பின் அதற்கு பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.

ராமநாதசுவாமி திருக்கோயில்
பின்னர் பக்தர்கள் ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். அதை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சர்வ அமாவாசை
சர்வ அமாவாசையையொட்டி இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. எனவே, அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதம் செய்யும் புரோகிதர்கள் கட்டாயம் முக கவசம்; அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

போலீசார் கண்காணிப்பு
மேலும் கூட்ட நெரிசலால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால் சமூக இடைவெளியை பின்பற்றி தீர்த்தங்களில் புனித நீராட வேண்டும் என ஒலி பெருக்கி மூலமாக ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

அமாவாசை நன்மைகள்
நமது முன்னோர்கள், அமாவாசை தினத்தன்று நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். ஆகையால் அமாவாசை தினத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையலிட்டு வழிபடுவது போன்ற செயல்கள் மூலம் பித்ரு சாபம் நீங்கும். அதோடு முன்னோர்களின் பரிபூரண ஆசியும் நமக்கு கிடைக்கும். அமாவாசை தினத்தில் குலதெய்வத்திற்கு பூஜை செய்து படையலிட்டு வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications