மோடி சுட்ட வடைகள் ஊசிப்போயிட்டு! ராமநாதபுரத்தில் போட்டியா? ஸ்டாலின் ‛அட்டாக்’கால் திரும்பும் பாஜக
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் ராமநாதபுரத்தில் இன்று நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறிய பரபரப்பான கருத்து பாஜகவினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற பணிகளை தொடங்கி உள்ளார்.

அதன்படிதமிழ்நாடு முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்கு சாவடிக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் தமிழ்நாட்டில் திமுக வாக்குச்சாவடி முகவர்களின் பயிறசி பட்டறை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி பாசறை கூட்டம் நடத்திட முடிவு செய்து 5 மண்டலங்களாக பிரித்து உத்தரவிட்டார்.
அதன்படி முதல் கூட்டம் டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் நிர்வாக ரீதியான 17 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து 2வது பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியபோது ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக பரவும் தகவல் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக ஸ்டாலின் பேசியதாவது:
மத்திய பாஜக அரசு தேர்தல் வேளையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தரவில்லை. கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார்களே.. ரூ.15 ஆயிரமாவது தந்தார்களா.. இல்லை. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறினார்களே. அதையும் செய்யவில்லை. உழவர்கள் வருமானம் 2 மடங்கு உயர்த்துவதாக கூறியதையும் செய்யவில்லை.
இதுதவிர தமிழ்நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் ராமநாதபுரத்தல் போட்டியிட பிரதமரை சிலர் அழைப்பதாக ஊடகங்களில் தகவல் வருகிறது. அதாவது ராமநாதபுரத்தில் பிரசாரத்தின்போது சொன்ன வாக்குறுதியை மோடி நிறைவேற்றினாரா? . 2014ல் ஏப்ரலில் ராமநாதபுரத்தில் மோடி பிரதமராக ஆகும் முன்பு வாக்கு கேட்டு பேசினார்.
மிகப்பெரிய புண்ணிய தலம் ராமேஸ்வரம் சர்வதேச சுற்றலா தளமாக மாற்றுவதாக கூறினார். இன்று வரை அதனை செய்யவில்லை. அம்ருத், சுதேசி திட்டத்தில் பாதாள சாக்கடை பணி மேற்கொண்டனர். அதையும் அதிமுக அரசு சரியாக செய்யவில்லை. புயல், கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி அழிந்துவிட்டது. ரயில் பாதைகள் காணாமல் போய்விட்டது. இத்தகைய சூழலில் ரயில் போக்குவரத்து அடிக்கல் நாட்டி தனுஷ்கோடி-ராமேஸ்வரம் 17 கிலோமீட்டர் தொலைவு பாதை இன்னும் முடிக்கவில்லை
தேர்தல் வேளையில் இப்படி மோடி பல வடைகள் சுட்டார். தேர்தல் முடிந்ததும் ஊசிப்போய்விட்டது. தமிழ்நாட்டுக்கு பல ஸ்பெஷல் வடைகள் சுடப்பட்டது. இதில் மீனவர்கள் தொடர்பானது முக்கியமானது. தற்போதும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் துன்புறுத்தப்படுவது தினமும் நடக்கிறது. இதற்கு காங்கிரஸ் தான் காரணம் என அவர் கூறினார். இலங்கை கடற்படையால் தற்போது 9 ஆண்டுகளாக தாக்கப்படவில்லையா?. மீனவர்கள் வாழ்க்கை சிறக்க சிறப்பான ஆட்சி அமைய வேண்டும் என்றார். ஆனால் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் யார்? மீனவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை விரட்டுவது, படககு பறிமுதல், வலைகளை அறுப்பது பறிப்பது போன்ற செயல்கள் தொடர்கின்றன. அதனை தட்டிக்கேட்கும் அரசாக அவர் இல்லை. மோடி அரசிலும் தாக்குதல் தொடர்கிறது என்றால் அவரது ஆட்சி பலவீனமாக உள்ளது என்று தானே அர்த்தம்'' என கடுமையாக தாக்கி பேசினார்.












Click it and Unblock the Notifications