தேமுதிக யாருடன் கூட்டணி...? ஜனவரி மாதம் விஜயகாந்த் அறிவிப்பார்... பிரேமலதா தகவல்
ராமநாதபுரம்: வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை வரும் ஜனவரி மாதத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தேமுதிக தனி போட்டியிட வேண்டும் என்பது தான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

கூட்டணி நிலைப்பாடு
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணிக் கணக்குகளை இப்போதே கூட்டிக் கழிக்கத் தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்த வகையில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாட்டை இந்த முறை விரைவாக அதாவது தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது அக்கட்சி தலைமை. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள், ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

யாருடன் கூட்டணி?
இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் செந்தில் என்ற ஊழியரின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூருக்கு வருகை தந்திருந்தார் பிரேமலதா. அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த கால தேர்தல்களை போல் அல்லாமல் இந்தமுறை தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றி விரைந்து அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.

விஜயகாந்த் அறிவிப்பார்
மேலும், தற்போது வரை தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் கட்சியினர் அனைவரது விருப்பம் என்றும் இருப்பினும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி அதில் கலந்துபேசி இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார். வரும் தைப்பொங்கலுக்குள் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிகவில்
மற்ற எந்த அரசியல் கட்சிகளிலும் இல்லாத வகையில் தேமுதிகவில் இளைஞர்கள் மிகவும் சுறுசுறுப்பாக கட்சிப் பணிகளை கவனித்து வருவதாகவும் பிரேமலதா பெருமிதம் தெரிவித்தார். கட்சியின் தலைமை அலுவலக ஊழியர் திருமணத்திற்கு விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் வந்திருந்தார்.












Click it and Unblock the Notifications