ராமநாதபுரம் அருகே விமான நிலையம்.. 10 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கும்பரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயம் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால், தங்கள் விளைநிலம் பறிபோகும் என்று அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள். இதனால் அங்கு விமான நிலையம் அமைக்கக்கூடாது என அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் தங்கள் பகுதியில் அமைத்தால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வறண்ட பூமி, அதேநேரம் புண்ணிய ஸ்தலங்கள் நிறைந்த புண்ணிய பூமி. இங்குள்ள ராமேஸ்வரம் மற்றும் பல்வேறு கோயில் தலங்களுக்கு வடமாநிலங்களில் இருந்து பலரும் வருகிறார்கள். அதேபோல் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் துபாய், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்கள் வழியாக வெளிநாடு சென்று வருகிறார்கள்.

எனவே சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் உள்ளூர் மக்களின் அதிகப்படியான தேவை காரணமாக ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதன்படி ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ராமநாதபுரம் அருகே கும்பரம் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. கும்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயம் நிறைந்த பகுதியாகும்.
இங்கு விமான நிலையம் அமைக்கக்கூடாது என அப்பகுதி கிராம மக்கள், அத்திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக கலெக்டர், மக்கள் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து மனுக்கள் அளித்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை கும்பரம் கிராமத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கும்பரம், ராமன்வலசை, பூசாரிவலசை, கல்கிணற்றுவலசை, தெற்கு கும்பரம், ஏ.பி.நகர், தெற்குவாணி வீதி, படவெட்டி வலசை, மணியக்காரவலசை, ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் கலந்து கொண்டார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நாங்கள் நெல், தென்னை, பனை விவசாயத்தை நம்பி உள்ளோம். கும்பரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் விளைநிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். இங்குள்ள 10 கிராமங்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த திட்டத்தை கைவிட வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று எச்சரித்தனர்..












Click it and Unblock the Notifications