“மெகா” பிளான்.. இந்தியா - வளைகுடா ரயில்வே இணைப்பு! சவூதி அரேபிய இளவரசரை சந்தித்த அஜித் தோவல்
ரியாத்: வளைகுடா நாடுகளை இந்தியாவுடன் இணைப்பது தொடர்பாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசர், அமெரிக்கா, ஐக்கிய அரபு அதிகாரிகளை ஜித்தாவில் சந்தித்து பேசி இருக்கிறார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நேற்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவானை சந்தித்து பேசி இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்ததாக இந்த இருவரும் ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் குவாட் மாநாட்டில் சந்தித்து பேச இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் வாஷிங்டனில் இந்தியா - அமெரிக்க நாடுகள் இணைந்து ICET எனப்படும் சிக்கலான, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்து முன்முயற்சி திட்டத்தை வகுத்த பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனான சந்திப்பை தொடர்ந்து ஜித்தாவில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் மற்றும் ஷேக் தனூன் ஆகியோரையும் ஜேக் சுல்லிவான் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் ஏமன் நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஆலோசித்து இருக்கிறார்.
ஜித்தா சென்று இருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள், சவூதி பட்டத்து இளவரசருடன் ரயில் வழித்தடங்கள் மூலமாகவும், கப்பல் வழித்தடம் மூலமாகவும் இந்தியாவை வளைகுடா நாடுகளுடன் இணைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர். இந்த இணைப்பை உலகின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்து தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
வளைகுடாவை இணைக்கும் ரயில் வழித்தடங்களை, இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களுடனும் இணைக்கும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தெற்கு ஆசியப் பகுதிகளில் நிலவும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளது.

அதே நேரம் சீனாவும் தனது கனவு திட்டமான BRI எனப்படும் பெல்ட் மற்றும் ரோடு முன்னெடுப்பை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. சீனாவின் இந்த பிஆர்ஐ திட்டமும் வளைகுடா நாடுகளில் செயல்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட ஒன்றுதான். மத்திய கிழக்கு நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்படுத்துவது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற I2U2 என்ற குழுவின் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையில்தான் இந்தியா - வளைகுடா நாடுகள் இணைப்பு திட்டத்துக்கான யோசனை தோன்றி இருக்கிறது.
இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்ல இந்தியா, அமெரிக்கா, சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் முனைப்போடு உள்ளன. இந்த குழுவில் அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் உள்ளன. அதே நேரம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்து உள்ள இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இந்த இணைப்பு திட்டத்துக்கான முன்னெடுப்பு தொடர்பாக எந்த விளக்கத்தை அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications