வளைகுடாவில் மூக்கை நுழைக்கும் ஷெரீப்.. சவுதி பாகிஸ்தான் டீல் என்ன! உலக போர் வெடிக்கும் ஆபத்து
ரியாத்: மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், திடீரென தனது நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியாவிற்குப் பாகிஸ்தான் மிக பெரிய ராணுவப் படைப் பிரிவை அனுப்பியுள்ளது. சவுதி அரேபியாவின் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் பாகிஸ்தான் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்ற பாதுகாப்பு ஒப்பந்தமே இதற்கு காரணம்.. அப்படி என்ன ஒப்பந்தம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் முழுமையாக முடியாத சூழலில், இரு தரப்பிற்கும் இடையே ஒரு பக்கம் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அதேநேரம் மற்றொரு புறம் வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. வளைகுடா நாடுகளில் எந்த நாடு மீது எப்போது ஈரான் தாக்குதலை மீண்டும் ஆரம்பிக்கும் என்று தெரியாத சூழலே நிலவுகிறது.

ராணுவத்தை அனுப்பிய பாகிஸ்தான்
இந்தச் சூழலில் தான் சவுதி அரேபியாவிற்குப் பாகிஸ்தான் மிகப் பெரிய ராணுவப் படை பிரிவை அனுப்பியுள்ளது. வளைகுடா மோதலில் பாகிஸ்தானின் இந்த என்ட்ரி சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு சவுதி பாகிஸ்தான் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில், அதன் ஒரு பகுதியாகவே பாகிஸ்தான் தனது ராணுவத்தை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. சவுதி அரேபிய அரசும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது..
13,000 பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டுள்ள மிகப் பெரிய ஒரு ராணுவ பிரிவு சவுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 13,000 பாகிஸ்தான் வீரர்கள் புதிதாகச் சவுதிக்குச் சென்றுள்ளனர். ஏற்கனவே அங்கிருக்கும் 10,000 வீரர்களுடன் சேர்த்தால், இப்போது சவுதியில் மட்டும் 23,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் முகாமிட்டுள்ளனர். மேலும், 10 முதல் 18 அதிநவீன போர் விமானங்கள் மற்றும் அவற்றுக்கான சப்போர்ட் விமானங்களும் சவுதியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் விமான தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த மாதம் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியபோதே சவுதி மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. அப்போதே பாகிஸ்தான் ரகசியமாக 'மிசைல் இன்டர்செப்டர்' எனப்படும் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளையும் சவுதிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது..
கடந்த மாதம்
இது தொடர்பாகச் சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர் முகமது மெஹ்தி கூறுகையில், "இந்தப் படைப்பிரிவு கடந்த மாதமே சவுதிக்குச் சென்றுவிட்டது. ஆனால், இப்போதுதான் சவுதி அதிகாரிகள் இதை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இவர்கள் முழுக்க முழுக்க சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்காக மட்டுமே அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் சவுதி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் வேளையில், பாகிஸ்தான் தனது வான்வழிப் பாதுகாப்பையும், தரைப்படை பலத்தையும் சவுதிக்கு அனுப்பியுள்ளது.
சவுதி ஈரான் டீல்
கடந்த செப்டம்பர் மாதம் சவுதி பாகிஸ்தான் இடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வகையில் இந்த டீல் போடப்பட்டது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் "எந்தவொரு நாட்டின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்" என்பதாகும். அதாவது சவுதி அல்லது பாகிஸ்தான் மீது எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும் அது இரு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும்!
முஸ்லீம் நாடுகளின் நேட்டோ
அதாவது இப்போது சவுதி மீது ஈரான் அத்துமீறுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது சவுதியுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கும் பதிலடி கொடுக்கும். சவுதி மீது யார் கை வைத்தாலும் பாகிஸ்தான் வரும் என்பதே இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் வேறு சில நாடுகளையும் உள்ளே கொண்டு வர இரு நாடுகளும் முயல்கிறது. இதன் மூலம் இஸ்லாமிய நாடுகளின் நேட்டோ போன்ற ஒரு அமைப்பையும் உருவாக்க முயல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications