ஈரானை தாக்க விடமாட்டோம்.. அமெரிக்காவுக்கு ‛நோ' சொன்ன சவுதி அரேபியா! கமேனிக்கு குட்நியூஸ்
டெஹ்ரான்: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு தனது வான்வெளி பரப்பை வழங்க மாட்டோம் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானுக்கு, சவுதி அரேபியா மெசேஜ் அனுப்பி உள்ளது. இதனால் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரானின் உச்சபட்ச தலைவராக அயதுல்லா அலி கமேனி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது ஈரானில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி தான் முக்கிய காரணமாகும். அங்கு நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளின் விலை அதிகரித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கிய போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இப்போது வரை சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வெடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ,‛ஈரானில் மக்கள் போராட அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தை முடக்க கூடாது. மீறினால் அமெரிக்கா தலையீடு செய்யும்'' என்று எச்சரிக்கை விடுத்தார். ஈரானில் போராட்டத்தை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை சவுதி அரேபியா விரும்பவில்லை. இதனால் எந்த காரணம் கொண்டும் தங்களின் வான்வெளி பரப்பை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி வழங்கமாட்டோம் என்று சவுதி அரேபியா சார்பில் ஈரானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் அரசுக்கு நெருக்கமானவர் கூறுகையில், ‛‛ஈரான் மீது எடுக்கப்படும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் சவுதி அரேபியா ஒரு பகுதியாக இருக்காது. இந்த தாக்குதலுக்காக சவுதி அரேபியாவின் பிராந்தியமும், வான்வெளியும் யாருக்கும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஈரானிடம் தகவல் வழங்கி உள்ளோம்''என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications