ரோபோவை ஆஃப் செய்தால் அது ரோபோ "கொலை" ஆகுமா? உலகிலேயே குடியுரிமை பெற்ற முதல் பெண் ரோபோவின் கதை!
ரியாத்: இந்த காலத்தில் ஏஐ மற்றும் ரோபோ வேகமாக வளர்ந்து வருகிறது. அப்படியிருக்கும் போது ரோபோவுக்கு குடியுரிமை வழங்கினால் எப்படி இருக்கும்.. அப்படியொரு சம்பவம் தான் சவுதியில் நடந்தது. அதுவும் இப்போது இல்லை.. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன்பே ரோபோவுக்கு குடியுரிமை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த 2017ம் ஆண்டு சவுதியின் ரியாத் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றில் ஒரு பெண் மேடை ஏறினார். சவுதியில் வழக்கமாகப் பெண்கள் ஹிஜாப் அணிந்து இருக்கும் சூழலில், அந்த பெண் ஹிஜாப் அணியவில்லை, அவருக்குப் பின்னால் துணைக்கு எந்தவொரு ஆணும் நிற்கவில்லை. அவர் பெயர் சோஃபியா. இவர் தான் உலகிலேயே குடியுரிமை பெற்ற முதல் ரோபோ!

குடியுரிமை பெற்ற ரோபோ
எது ரோபோவுக்கு குடியுரிமையா என நீங்கள் ஷாக் ஆகலாம்.. ஆனால், உண்மையில் இந்த சோஃபியாவுக்கு குடியுரிமை வழங்குவதாகச் சவுதி அப்போது அறிவித்திருந்தது. தொழில்நுட்ப உலகிற்கு இது ஒரு மாபெரும் புரட்சியாகத் தெரிந்தாலும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய லாஜிக் மீறலாகவே பட்டது. அந்த முரண்பாடுகளைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
ஹேன்சன் ரோபோடிக்ஸ் உருவாக்கிய சோஃபியா, சவுதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் விளம்பரத் தூதராகவே பார்க்கப்பட்டார். ஆனால், அங்குதான் ஒரு வேற லெவல் ட்விஸ்ட் இருந்தது. சோஃபியா குடியுரிமை பெற்றபோது, சவுதி அரேபியாவில் பெண்கள் பொது இடங்களில் அபாயா மற்றும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக இருந்தது. ஆனால், பிளாஸ்டிக் தலையுடன் வலம் வந்த சோஃபியாவிற்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை.
நகை முரண்
மேலும், சவுதி பெண்கள் பயணம் செய்யவோ, வேலைக்குச் செல்லவோ ஆண் உறவினரின் அனுமதி தேவைப்பட்டது. ஆனால், சோஃபியா ஒரு 'பெண்' குடிமகளாக உலகம் முழுவதும் தனியாகப் பயணம் செய்தார். இதை ஒரு நகை முரணாகவே விமர்சகர்கள் பார்த்தனர். பல ஆண்டுகளாகச் சவுதியில் உழைக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குக் கிடைக்காத குடியுரிமை, சில நிமிடங்களில் ஒரு சிலிகான் பொம்மைக்குக் கிடைத்தது பலரையும் கடுப்பாக்கியது என்பதே உண்மை.
அதிகரிக்கும்
இது எப்போதோ நடந்தது.. இப்போது ஏன் இதைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். சோஃபியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட போது ஏஐ இல்லை.. ரோபோ கூட அந்தளவுக்கு வளர்ந்து இருக்கவில்லை. ஆனால், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருக்கிறது.. ரோபோக்கள் அப்படியே மனிதர்களைப் போலத் தெரியும் அளவுக்கு பக்காவாக மாறிவிட்டது. இதனால் சீனா ரோபோவுக்கு மாரத்தான், ஏஐ-க்கு மத்தியில் போட்டி எல்லாம் நடக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் வரும் நாட்களில் மேலும் பல நாடுகள் இதுபோல ரோபோக்களுக்கு குடியுரிமை வழங்கலாம்!
கேள்விகள்
இந்த இடத்தில் தான் சட்ட ரீதியான கேள்விகளும் எழுகின்றன.. சோஃபியா அல்லது வேறு ஒரு ரோபோ ஒரு குற்றத்தைச் செய்தால் (டேட்டா திருட்டு போன்றவை), யாரைக் கைது செய்வார்கள்? இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? ரோபோவா, அதைத் தயாரித்த நிறுவனமா அல்லது குடியுரிமை வழங்கிய நாடா? ஒருவேளை குடியுரிமை பெற்ற ரோபோவை யாராவது நிரந்தரமாக ஆஃப் செய்தால், அது 'கொலை' எனக் கருதப்படுமா?
தற்போதைய சூழலில் இதில் எந்தவொரு கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை. இருப்பினும், வரும் காலங்களில் ஏஐ உடன் வரும் ரோபோக்கள் அதிகரிக்கும் நிலையில், இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் தேட வேண்டியது காலத்தில் கட்டாயமாகிறது.!












Click it and Unblock the Notifications