காவிரியில் வெள்ளம்.. மேட்டூரில் 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்.. 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சேலம்: காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் திறக்கப்படும் நீர் அளவு அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. மூன்றாவது முறையாக இந்த வருடத்தில் மட்டும் மேட்டூர் அணையில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் அங்கிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நேற்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். நேற்று காலை காவிரியில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 65 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதையடுத்து காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. நேற்று மாலை நீர் வரத்து 145000 கன அடியாக உயர்ந்தது.
அங்கு வந்த நீர் அப்படியே மின் நிலையங்கள் வழியாகவும், நேரடியாக ஆற்றிலும் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் அங்கு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து நேற்று இரவு நீர் வரத்து 1.70 லட்சம் கன அடியை எட்டியது. இதனால் அதே அளவு நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து தற்போது காவிரிகரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தர்மபுரி,சேலம்,ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக கால் நடைகள், குழந்தைகளை வைத்துக்கொண்டு கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.