மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.. 15,000 கன அடி நீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் மேட்டூரில் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. முன்னதாக கோடை காலத்திலேயே விடாமல் மழை பெய்து வந்தது. அப்போது குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் தேதி அன்று நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திரம் அடைந்த பின் இதற்கு முன் இப்படி மே 24ம் தேதியே ஒருமுறை கூட மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது இல்லை. அதாவது கடந்த 60 வருடங்களில் ஒருமுறை கூட மேட்டூர் அணை இவ்வளவு சீக்கிரம் திறக்கப்பட்டது இல்லை.
தற்போது தென் மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து நீர் வெளியேற்றப்பட்டதும் இந்த அதிக நீர் வரத்திற்கு காரணம் ஆகும். இதையடுத்து நேற்று இரவு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. மேட்டூர் ஆணை வரலாற்றில் 68வது முறையாக அணை 100 அடியை எட்டியுள்ளது.
அதோடு அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 98.20 அடியாக உள்ளது. நீர் இருப்பு 62.53 டிஎம்சியாக உள்ளது. மேலும் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் மேட்டூரில் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீர் பாசன பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications