பூட்டியே கிடந்த வீடு.. அலறிய பொன்னம்மாப்பேட்டை.. சேலத்தில் என்ன நடந்தது.. திகில் கிளப்பிய 4 பேர்!
சேலம்: சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக சேலம் அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூத்த மகன் புற்று நோயால் இறந்ததை தாங்க முடியாத பெற்றோர், தங்களின் மற்ற இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாங்களும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை அருகே வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் உயிரிழந்தார்.

மயங்கி விழுந்தனர்
மதன்குமார் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மதன் குமாரை பிரிந்து வாழ மனமில்லாமல் முருகன் - கோகிலா தம்பதியினர் மற்ற இரு மகன்களான வசந்தகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாங்களும் விஷம் அருந்தி மயங்கி விழுந்தனர்

கதவை உடைத்த போலீஸ்
இன்று அதிகாலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை
இதனையடுத்து நான்கு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

என்ன காரணம்
வீட்டில் ஒருவரின் இறப்பை தாங்க முடியாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் தற்கொலைக்கு இதுதான் காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications