கொரோனா அச்சத்தால் 95 வயது மூதாட்டியை கழிப்பறையில் தங்க வைத்த மகன்?.. சேலத்தில் பரிதாபம்!
சேலம்: சேலத்தில் கொரோனா அச்சத்தால் மூதாட்டி ஒருவரை பெற்ற மகனே கழிவறையில் தங்க வைத்த பரிதாபம் நடந்துள்ளது. தகவலறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை காப்பாற்றினார்.
சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதா (95). இவரது கணவர் போலீஸ்காரராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
ராதாவுக்கு 4 மகன்கள், இதில் 2 மகன்கள் இறந்து விட்டனர். இதை அடுத்து கடைசி மகனான ஸ்ரீதர் என்பவர் வீட்டில் வசித்து வந்தார். ஸ்ரீதர் டால்மியா போர்டில் பணிபுரிந்தார்.மேலும் ராதாவுக்கு அரசின் சார்பில் பென்சன் தொகையும் வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ்
இந்த நிலையில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினர் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர்.
கழிவறை
நேற்று முன்தினம் ஸ்ரீதர் வசித்து வந்த வீட்டின் பின்புற பகுதியில் இருந்து பெண் ஒருவரின் அழுகுரல் கேட்டது. இதனை அறிந்த அந்த பகுதியினர் அருகில் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கழிவறையில் ராதா உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்தது தெரியவந்தது.
தகவல்
சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அவரது துரித நடவடிக்கையின் பேரில், சேலம் மாவட்டம், சமூக நலதுறையின் அதிகாரி கிருத்திகாவின் ஆலோசனையின்பேரில் போதிமரம் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை பார்வையிட்டனர்.
வெயில்
அந்த மூதாட்டி மழையிலும், வெயிலிலும், உணவின்றி, தண்ணீரின்றி கவனிப்பார் அற்ற நிலையில் காணப்பட்டார். அவரை போதிமரம் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன.