நீ இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை.. நீ மறைந்தால் மனிதகுலமே இல்லை! ஒரு க(த)ண்ணீர் அஞ்சலி போஸ்டர்
சேலம்: சேலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சுட்டிக் காட்டி ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் ஆங்காங்கே தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் ஆறுகளில் ஊற்று தோண்டி அதிலிருந்து தண்ணீர் எடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தண்ணீர் எப்போது வரும் என இரவு நேரங்களில் தீப்பந்தங்களுடன் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை விளக்கிக் கூறும் ஒரு போஸ்டர் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.
நீர்
அதில் தோற்றம் என்ற இடத்தில் ஆதி என்றும் மறைவு என்ற இடத்தில் 2050 (ஆரம்பம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீ(ர்) அழுதாலும் கண்ணீர் (நீர்) வருவதில்லை.
கவலை இல்லை
காரணம் மனிதன்தான் என்பது அவனுக்கும் புரியவில்லை! நீ(ர்) இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை! நீ (ர்) மறைந்தால் மனிதகுலமே இல்லை!
அஞ்சலி
தெய்த்திரு கண்ணீர் அவர்கள் நீர் இன்றி தவிக்கப்போகும் உயிருக்கும் உலகிற்கும் எங்களது பணிவான கண்ணீர் அஞ்சலி. மகன்கள்- மரம், மலை, அணை, கணவன்- காற்று, மகள்கள்- குளம், ஏரி, நதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரல்
இதில் நீர் சொட்டும் புகைப்படம் போடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சேலம் முழுவதும் வைரலாகி வருகிறது. எதார்த்தத்தை விளக்குவது போல் இருக்கிறது.