சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நடிகை கஸ்தூரி! ஏன், எதற்காக இந்த சந்திப்பு?
சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று மாலை எடப்பாடி பழனிசாமியை நடிகை கஸ்தூரி சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரில் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அங்கு அவரை அரசியல் கட்சியினர் சந்தித்தும் வருகிறார்கள்.

கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் பிஸியாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் திமுக தனக்கான கூட்டணியையும் பாஜக தனக்கான கூட்டணியையும் அமைத்துவிட்ட போதிலும் அதிமுக இன்னும் எந்த இறுதியையும் செய்யவில்லை.
அதிமுகவுடன் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்த நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 பாஜக எம்எல்ஏக்கள் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைய போவதாக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் அறிவித்திருந்தார். ஆனால் நேற்று அந்த நேரத்திற்கு யாரும் அப்படி அதிமுகவில் இணையவில்லை. ஆனால் மாலை 5.45 மணிக்கு சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியை நடிகை கஸ்தூரி நேரில் சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின் போது இருவரும் அரசியல் பேசினார்களா, இல்லையா என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அது போல் கோவை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியையும் அவர் சந்தித்து பேசியிருந்தார்.
பாஜக ஆதரவு நடிகை என விமர்சிக்கப்படும் நடிகை கஸ்தூரி சமூக நலம் சார்ந்த கருத்துகளை பொது வெளியில் விவாதிப்பது வழக்கம். இந்த நிலையில் இவர் எதற்காக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்தார் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications