"அதிமுகவுக்கு புதிய பொதுச்செயலாளர்.." சொந்த ஊரிலேயே கிளம்பிய எதிர்ப்பு.. எடப்பாடிக்கு பெரிய சிக்கல்
சேலம்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னும் முடியாத நிலையில், எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், நடக்கும் உட்கட்சி மோதல்கள் இன்னும் தொடர்கிறது. அதன் பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்து இருந்ததும் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இடையே பூசல்கள் இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையிலும், அவை சில வாரங்களுக்கு முன்னர் தான் பகிரங்கமாக வெளிப்படத் தொடங்கியது.

ஓ. பன்னீர்செல்வம்
ஒரு பக்கம் ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடியையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். எடப்பாடியை பொதுச்செயலாளராக நியமித்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதேநேரம் இந்த விவகாரம் தொடங்கியது முதலே எடப்பாடியின் கைதான் ஓங்கி உள்ளது. அதிமுகவில் நிர்வாகிகள் பலரது ஆதரவு எடப்பாடிக்கே உள்ளது. இதனால் தான் அவரால் பொதுக்குழுவில் நினைத்த தீர்மானங்களை நிறைவேற்ற முடிந்தது. மேலும், கட்சியில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள அவர் விரைவில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ச்சி
இப்படி அடுத்தடுத்து அதிரடிகளைக் காட்டி வந்த எடப்பாடிக்கு இப்போது அவரது சொந்த மாவட்டத்திலேயே அதிர்ச்சி கொடுத்துள்ளனர். சேலம் மாநகர் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனைக் கூட்டத்திற்குக் கலந்து கொள்ளும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் போஸ்டரில் புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க ஆலோசனைக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

போஸ்டர்
சேலம் முழுக்க ஒட்டப்பட்டுள்ள அந்தப் போஸ்டரில், "எம்ஜிஆர் அதிமுக கட்சி தொடங்கிய 1972ஆம் ஆண்டு கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி.. அதில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி உள்ளார். இந்த உரிமையை மீட்டெடுத்து புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க அதிமுக தொண்டர்களும் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்களும் ஜெ ஜெயலலிதா பேரவையின் கழகத்தின் உறுப்பினர்களும் தொண்டர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.

எடப்பாடி படம் இல்லை
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் சார்பில் இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தப் போஸ்டரில் எம்ஜிஆர், ஜானகி அம்மாள் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதேநேரம் எடப்பாடி பழனிசாமியின் படம் இடம் பெறவில்லை. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிரான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications