சிறப்பான கூட்டணி அமையும்.. தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்.. அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி!
சேலம்: 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக கூறிய அவர், தொண்டர்கள் யாரும் கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணிக்கு தவெக வர வாய்ப்பில்லை என்று மறைமுகமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் 54ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சேலம் மாவட்டம் ஓமலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

இதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இந்தியாவிலும் சரி.. அதிமுகவிலும் சரி.. எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் எந்த இயக்கத்திற்கும் இப்படிப்பட்ட சோதனைகள் வந்தது கிடையாது. அதையெல்லாம் முறியடித்துதான் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கமாக அதிமுக இன்று இருந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை தாக்க தாக்க தான் வளர்ந்து கொண்டே இருக்கும்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நிறைய சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். அனைத்து பிரச்சனைகளையும் முறியடித்து தான் அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது. பழுத்த மரத்தில் தான் கல்லடி படும் என்பது போல் அதிமுக மீது அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். துரோகிகள் நம்மோடு இருந்து அதிமுகவை வீழ்த்த முற்பட்டார்கள். அத்தனை பேரையும் வீழ்த்தி அதிமுக நிமிர்ந்து நிற்கிறது.
கள்ள ஓட்டு காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக எதிர்க்கிறது. போலி வாக்காளர்களை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது மிக முக்கியமானது. ஆளுங்கட்சி ஆட்கள் தான் இந்தப் பணிகளை செய்கின்றனர். இதனை எதிர்ப்பது போல் எதிர்த்துவிட்டு, வீடு வீடாக திமுகவினரே விண்ணப்பங்களை கொடுத்து வருகின்றனர்.
2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். அதிமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கூட்டணி பற்றி சிலர் தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் யாரும் கவலைப்பட வேண்டாம். சிறப்பான கூட்டணி அமையும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications