எதிர்க்கட்சி நாங்கதான்.. அடுத்த ஆளுங்கட்சி.. தவெகவுக்கு ‘வெடி’ வீசிய எடப்பாடி பழனிசாமி!
சேலம்: "சட்டப்பேரவையில் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக அதிமுக வரும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
"அடுத்த 63 வாரத்துக்கு நாம்தான் (தவெக) எதிர்க்கட்சி, விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர்." என தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை எனத் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பார்கள். தமிழகத்தில் பல இடங்களில் கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் போதை பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. எனவே, கள்ளச் சாராய விற்பனை, போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில், பாலியல் வன்கொடுமை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழக அரசு சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது, பாலியல் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறுகிறது. பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வேலியே பயிரை மேய்வது போல் ஒருசில ஆசிரியர்கள் செய்யும் தவறு, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆசிரியர்களை நம்பித் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆசிரியர்கள்தான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்த்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல் துறை சம்மன் ஒட்டியது மற்றும் கிழிக்கப்பட்டது தொடர்பான சலசலப்பு பற்றிய கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "எதுவாக இருந்தாலும் காவல் துறையினர் சட்டப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்." என்றார்.
தவெக தான் எதிர்க்கட்சி என அக்கட்சியின் கூட்டத்தில் பேசப்பட்டது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் அதிமுகவை அங்கீகரித்துள்ளனர். அதிமுக இப்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக அதிமுக வரும்" எனத் தெரிவித்தார்.
அண்மையில் தவெக இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே நடைபெற்றது. அப்போது தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "தளபதி விஜய்யை, தலைவர் என்று அழைக்கக்கூடிய பரிணாமத்தை நோக்கி பயணிக்கிறோம். அடுத்த 63 வாரத்துக்கு நாம்தான் (தவெக) எதிர்க்கட்சி, விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர்.
தமிழக அரசியலுக்கு ஒரே மாற்று தவெக, ஒரே மாற்று தலைவர் விஜய். 1967ல் அண்ணா ஏற்படுத்தியது போல், 1977ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்தியது போல, மீண்டும் ஒரு பிளவு ஏற்படும். அதற்கு அஜென்டா ரெடி. பிளானிங் ரெடி. இன்னும் பல தலைவர்கள் தவெகவுக்கு வரப் போகிறார்கள். இன்னும் பல பூகம்பங்கள் அரசியலில் நடக்கப் போகிறது" எனப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications