சனாதனம் தான் நாட்டில் பெரிய பிரச்சனையா? அதை விடுங்க முடிஞ்சு போச்சு! அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!
சேலம்: சனாதனம் தான் நாட்டில் பெரிய பிரச்சனையா என்றும் அதை விடுங்க முடிஞ்சு போச்சு எனவும் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அட்வைஸ் அளித்துள்ளார்.
நாட்டில் பேசுவதற்கு எவ்வளவோ பிரச்சனைகள் உள்ள போது, சனாதனம்.. சனாதனம்.. என திரும்ப திரும்ப ஒன்றையே பேசிக்கொண்டிருப்பது சரியல்ல என கடுகடுத்தார். சேலம் மாவட்டம் மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து ஒன்று அவரை தேசியளவில் பிரபலம் அடைய வைத்துவிட்டது. ஆந்திராவில் தலித் இளைஞர்கள் சிலர் உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு பால் அபிஷேகம் செய்யும் அளவுக்கு அவர் தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளார். பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர் வினையாற்றினர்.
ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் உதயநிதி பேசப்பட்டார். இந்தச் சூழலில் அவர் பேசிய கருத்து பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கடுகடுத்த அன்புமணி, ''யப்பா, சனாதனத்தை விட்டால் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. காவிரியில் கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுப்பு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழ்நாட்டில் 1.5 கோடி பேர் உள்ளார்கள், இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டும்.''
''அதை விட்டுவிட்டு முடிஞ்சு போன ஒன்றை திரும்ப திரும்ப பேசக்கூடாது, அடுத்தது என்னவோ அதை பேசணும், சனாதனம்.. சனாதனம்..ன்னு இன்னும் அதையே கேட்காதீர்கள்'' என செய்தியாளர்களிடம் கூறினார் அன்புமணி. அதேபோல் இந்தியா என்கிற பெயரை பாரத் என்று மாற்றப்படுவதாக சொல்கிறார்களே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் வினவினர்.
முதலில் அது குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கட்டும் அதன் பிறகு கருத்து தெரிவிக்கிறேன் எனக் கூறி அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதிலிருந்தும் நழுவிக்கொண்டார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications