AmitShah: அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன? 1 மணி நேர சந்திப்புக்கு பிறகு நயினார் நாகேந்திரன் விளக்கம்
சேலம்: சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த நிலையில் தற்போது நயினார் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார். அவருக்கு சென்னை பசுமை வழிச்சாலையில் அரசு பங்களா இருந்த போதிலும், சுற்றுப்பயணம் காரணமாக அவ்வப்போது தனது சேலம் இல்லத்திலும் அவர் தங்குவதுண்டு.

கடந்த இரு தினங்களுக்கு முன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருந்தார். அவர் வெளியே வந்த போது கைக்குட்டையால் முகத்தை துடைத்ததை கைக்குட்டையால் முகத்தை மறைத்தார் என செய்தி பரவியது. இதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருந்தார்.
சேலத்தில் எடப்பாடி
இந்த நிலையில் இன்றைய தினம் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் பாஜக நிர்வாகிகளும் இருந்தனர்.
தேர்தல் பிரச்சாரம்
அக்டோபர் 1ஆம் தேதி முதல் பாஜக தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்க நயினார் நாகேந்திரன் சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.
1 மணி நேரம் பேச்சு
இந்த நிலையில் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இருவரும் பேசியது என்ன என்பது குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து ஆலோசிக்கவில்லை.
நிரந்தர நண்பர்கள்
அரசியலில் நிரந்தரமான நண்பர்களும், எதிரிகளும் இல்லை. எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எடப்பாடி முதல்வராக பிரச்சாரம் செய்வேன் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில் தற்போது கூட்டணியை விட்டு விலகியிருக்கிறார். அவர் தேஜக கூட்டணியில் மீண்டும் இணைவாரா என்பதை அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
பாஜக தலையிடாது
எந்த கட்சியின் உள்விவகாரத்திலும் பாஜக தலையிடுவதில்லை. மதுரையில் அக்டோபர் 11-ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வாக்குத் திருட்டு
மேலும் நயினார் கூறுகையில், நாங்கள் வாக்குத் திருட்டு செய்திருந்தால் தமிழகத்தில் திமுக எப்படி ஜெயித்திருக்கும். அவர்கள் ஆளும் கட்சியாக வந்திருக்கவே முடியாது. ராகுல் காந்தி தகுதி குறைந்துதான் எப்போதும் பேசுகிறார்.
ஆதாரம் எங்கே
ஏதோ ஆதாரத்தை வைத்திருக்கிறார் என ராகுல் காந்தி கூறி வருகிறார். ஆனால் அவர் எந்த ஆதாரத்தை வைத்திருக்கிறார் என தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்திருக்கிறார்கள். எத்தனை மீனவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் ஒருவரை கூட சுட்டுக் கொல்லவில்லை.
இலங்கை
தூக்குத் தண்டனைக்குச் செல்லவிருந்த ஒருவரை கூட மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார். இப்போதும் இலங்கையில் இருக்கக் கூடிய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜய் இதுவரை எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறார்.
சிந்திக்க வேண்டும்
வந்தவுடன் ஆட்சிக்கு வந்து விடுவோம் என நினைத்தால் தமிழக மக்கள் எதை நினைத்து வாக்களிப்பார்கள் என சிந்தித்துப் பேச வேண்டும். மாணிக்கம் தாகூர் அவரது தொகுதிக்கே வரவில்லை. அப்பாவி மக்களின் வாக்குகளை வாங்கி விட்டு டெல்லியில் இருக்கிறார்.
விசிகவுக்கு அமைச்சர் பதவி
அவருக்கு தொகுதி மக்களின் பிரச்சினையே தெரியாது. விடுதலைச் சிறுத்தைக்கு அமைச்சர் பதவி கொடுப்பீர்களா, கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறார்களே அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்களா என யாரும் கேட்காதது ஏன் என தெரியவில்லை. திமுகவில் கொள்கை அளவில் கூட்டணி இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications