ஓடும் பேருந்தில் தகராறு... குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் பலி, மற்றொருவர் காயம்
சேலம்: சேலம் அருகே ஓடும் பேருந்தில் மது போதையில் வாலிபர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில், பேருந்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரிலுள்ள உடையார்பாளையத்தை சேர்ந்த ஜவகரின் மகன் சிராஜிதின் (24), கட்டுமான தொழிலாளியான சிராஜிதின், தனது நண்பர் கோபால் (24) என்பவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு, நேற்று அதிகாலை சுமார் 6.00 மணியளவில் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் என்ற இடத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
மது போதையில் இருந்த இருவரும் தகராறு செய்தபடியே அங்கு நின்றிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கிருந்த வேகத்தடை அருகே மெதுவாக சென்ற பேருந்தில் இருவரும் ஓடிச் சென்று ஏறியுள்ளனர்.
சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அப்பேருந்தில் ஏறிய பின்னரும், இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் நிலைதடுமாறி கோபால் பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார். அவரை பின்பக்க படிக்கட்டில் நின்று கொண்டு சிராஜிதின் எட்டிப்பார்த்துள்ளார். அப்போது, அவருடன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு சிராஜிதினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தலையில் படுகாயமடைந்த கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான சிராஜிதின் "பேன்ட் பாக்கெட்"டில் இருந்து மதுபாட்டிலையும், கஞ்சா பொட்டலத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications