சேலம் சென்றாய பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோர்ட் ஆணை
சேலம்: சேலம் சென்றாய பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சென்றாயப்பெருமாள் கோவில் மிகவும் புகழ் பெற்றது. விசேஷ காலத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு, செல்ல பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த கோவிலில், பக்தர்களுக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த கோவிலில் கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்கள் அதிகம் பேர் வழிபாடு நடத்த வருகிறார்கள்.

கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகள் குறுகி, பக்தர்கள் கோவிலுக்கு எளிதாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்ல புரட்டாசி மாதம் இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். எனவே, பத்கர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துக் கொடுக்க கோரி கடந்த ஆண்டு நவம்பர் 7-ந்தேதி மாவட்ட கலெக்டருக்கு விரிவான கோரிக்கை மனுவை அனுப்பினேன். கடந்த 8-ஆம் தேதி நினைவூட்டல் கடிதமும் அனுப்பியுள்ளேன்.
எனவே, என் கோரிக்கை மனுவை பரிசீலித்து, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்றாயன் கோவிலில் அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்க அறநிலையத்துறை ஆணையருக்கு தமிழ்நாடு அரசு பொதுத்துறை செயலாளர் எழுதிய கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல, வருகிற 24-ஆம் தேதி தேதி காலை 8.30 மணிக்கு கோவில் பக்தர்களுக்கு சரியான செயல் திட்டத்துடன் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி மாநகராட்சி உதவி ஆணையர், போலீஸ் உதவி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சேலம் தாசில்தார் அனுப்பிய சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.
அறநிலையத்துறை சார்பில் அரசு வக்கீல் கே.கார்த்திகேயன், மனுதாரர் தரப்பில் மனுதாரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி, தமிழ்நாடு அரசு சென்றாயன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications