ஆஹா..பயனாளிகள் லிஸ்ட்டே இவ்வளவு பெருசா? சேலத்தில் 50,202 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஸ்டாலின்
சேலம் : சேலம் மாவட்டத்தில் கருப்பூரில் முடிவுற்ற பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.653 கோடி மதிப்பீட்டில் இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த 16 அடி உயர முழுஉருவ வெண்கல சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, சேலத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளில் பேருந்து நின்று செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சேலம், கருப்பூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். 331 புதிய பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.653 கோடி மதிப்பீட்டில் இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 170.31 கோடி மதிப்பில் 50 ஆயிரத்து 202 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி. கருணாநிதியை முழு வசனகர்த்தாவாக மாற்றிய ஊர் சேலம். கருணாநிதி நூற்றாண்டின் முதல் சிலையை சேலத்தில் நிறுவியது பொருத்தமான ஒன்று. சேலம் மாவட்டத்திற்கு கணக்கிலடங்காத திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. சேலம் மாவட்டத்திற்கு இன்னும் அதிக திட்டங்கள் வர உள்ளன. சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்ற அப்படையில் செயல்பட்டு வருகிறோம்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications