“ஜெயலலிதாவை எப்படியெல்லாம் கேவலப்படுத்தியது திமுக.. நினைச்சு பாருங்க..” சேலத்தில் சீறிய மோடி!
சேலம்: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜெயலலிதாவை திமுகவினர் இழிவுபடுத்தியதாகக் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில், முதற்கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார். அந்தவகையில் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று சேலத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

இந்துக்கள் - மோடி: அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியா கூட்டணி, திமுக, காங்கிரஸ் கட்சியினர் வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்துக் கொண்டே இருக்கின்றனர். இந்து மதத்தை தாக்கும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேறு மதம் குறித்து பேசுவதே இல்லை. தமிழ்நாட்டின் கலாச்சாரமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிருவ திமுக - காங்கிரஸ் கூட்டணி எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்தி கூட்டணியினர் செங்கோலை அவமதித்துவிட்டனர்.
இந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அழிந்து போய் உள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து அவர்களுக்கு அழிவு தொடங்க போகிறது. தமிழ்நாட்டில் முத்ரா கடனை அதிக அளவில் வாங்கி பெண்கள் பயன் அடைகின்றனர். பெண்கள்தான் பாஜகவின் பாதுகாப்பு கவசம் போல் உள்ளனர். இனி வரும் காலங்களில் மேலும் சிறப்பு வாய்ந்த திட்டங்கள் பெண்களை சென்றடையும். இது மோடியின் கியாரண்டி.
ஜெயலலிதாவை கேவலப்படுத்தியது திமுக: திமுக - காங்கிரஸ் கட்சிகள் பெண்களை கேவலப்படுத்துவதற்கு தமிழ்நாடுதான் சாட்சி. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது திமுகவினர் எப்படியெல்லாம் இழிவு படுத்தினார்கள் என்பதை நினைத்து பாருங்கள். இதுதான் இவர்களின் உண்மையான முகம். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் தரக்கூடிய தீர்ப்பு திமுகவுக்கு பாடமாக அமைய வேண்டும்.
மகளிருக்கான திட்டங்களுக்கு அனுப்பும் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே, குறியாக இருக்கின்றனர். திமுகவும், காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்ட தேச விரோத செயல்கள் இரு கட்சிகளிலும் நிறைந்துள்ளன. 2ஜி ஊழலை செய்த திமுக தனது 5ஜி எனப்படும் ஐந்தாவது தலைமுறையை அதிகாரத்திற்கு கொண்டு வர துடிக்கிறது.
தலைவர்களை நினைவுகூர்ந்த மோடி: மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் தேசிய அரசியலில் மிகப்பெரிய உயரங்களை எட்டிய தலைவராக இருந்தார். அவர் மனது வைத்திருந்தால் பாரத பிரதமராக வந்து இருக்கலாம். தமிழரான அவரை காங்கிரஸ் வளரவிடாமல் செய்துவிட்டது. ஐயா பெருந்தலைவர் கே.காமராஜரை நினைவுகூர்கிறேன். அரசியலில் நேர்மை என்றால் அவர் முகம் தான் நினைவுக்கு வருகிறது. அவர் உருவாக்கிய மதிய உணவுத்திட்டம், மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதில் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது." எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
அண்மையில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி புகழ்ந்து பேசினார் பிரதமர் மோடி. இந்நிலையில் இன்று பேசும்போதும், திமுகவை விமர்சிக்க ஜெயலலிதா பெயரை பயன்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications