காசேதான் கடவுளடா... அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா... பாட்டுப் பாடி கலாய்த்த டாக்டர் ராமதாஸ்
சேலம்: சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக் குழு கூட்டத்தில் காசேதான் கடவுளடா... அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா... என பாட்டுப் பாடி கலாய்த்திருக்கிறார் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். சேலத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பாமக எம்எல்ஏக்கள் இரண்டு பேரும் பேசியதை மறைமுகமாக குறிப்பிட்டுதான் இந்தப் பாடலை பாடியதாக தொண்டர்கள் முணுமுணுத்தனர்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொது குழு கூட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்திற்கு டாக்டர் ராமதாஸ் வருகை தந்ததால், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காசேதான் கடவுளடா. அந்த கடவுளுக்கும் இதுதெரியுமா என்ற சினிமா பாடல் வரிகளை எழுதி வைத்து பாடினார். சேலத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பாமக எம்எல்ஏக்கள் இரண்டு பேரும் பேசியதை மறைமுகமாக குறிப்பிட்டுதான் இந்தப் பாடலை பாடியதாக தொண்டர்கள் முணுமுணுத்தனர். அதற்கு ஏற்பவே அவரது பேச்சில், காசுக்காக யாரிடமும் போய் கெஞ்சாதீர்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு, மானத்தை வீரத்தை அவர்களிடம் கொடுத்து விட்டோம். இனி வரும் காலத்தில் பணம் முக்கியம் இல்லை இனம் தான் முக்கியம் மானம் தான் முக்கியம் என்று வீரத்துடன் செயல்படுவோம் என்றார்.

முதல்வ்ராக அன்புமணி
மேலும் இக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகதான் அன்புமணியை முன்னிலைப்படுத்தி தனித்து தேர்தலிலும் போட்டியிட்டோம். கடுமையாக உழைத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட நம்மால் அப்போது பெறமுடியவில்லை. வன்னியர்கள் அதிகமாக வாழும் வட தமிழ்நாட்டில் சாதியுணர்வோடு ஒட்டு மொத்த மக்களும் வாக்களித்திருந்தால் பாமக மகத்தான வெற்றி பெற்று இருக்கும்.

என்னிடன் என்ன தவறு?
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடியவன் நான். அதேநேரத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்று கடந்த 45 வருடங்களாக போராடி வருகின்றேன். நம் இனத்தின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கிறோம். அந்த போராட்டங்களில் உயிர் பலியும் கொடுத்தும் இருக்கிறோம். வாழ்க்கை முழுவதும் போராட்டங்களையே எதிர்கொண்டு வந்த நான் சரியாக வழி நடத்தவில்லையா..என்ன தவறு செய்தேன்.. வழி நடத்திய என்னிடம் என்ன தவறு உள்ளது?

தொகுதிகளுக்காக கெஞ்சுகிறோம்
தனி இட ஒதுக்கீடு என 10.5 விழுக்காடு பெற்றும் நீதிபதி அதற்க்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளார். தனி இட ஒதுக்கீட்டை முன்பே பெற்றிருந்தால் யாரிடமும் கூட்டு சேர தேவை இருந்து இருக்காது. பாமகவினர் வெற்றி பெற கூடாது என்று கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறுகின்றன. அதனாலேயே 20 தொகுதியில் வெற்றி பெற வேண்டிய பாமக 5 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது. 234 தொகுதியில் பாமகவுக்கு வெறும் 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட பிறரிடம் அதிக சீட்டு வேண்டும் என்று கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது வேதனையாக உள்ளது.

பாமக வெல்ல வேண்டும்
இப்படிபட்ட நிலையில் மானம் உள்ளவர்களான நமக்கு, கோபம் வர வேண்டாமா, ரோசம் வர வேண்டாமா? இதுவரை நாம் ஏமாளிகளாக இருந்தது போதும், வீர வன்னியர்களாக தமிழகத்தை ஆளுவேன் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்.. இத்தனை காலம் எந்த அரசியல் கட்சியாவது வன்னியர்களுக்காக போராட்டங்களை நடத்தியிருக்கிறதா.. நான் தான் தொடர்ந்து போராடி வருகிறேன். வன்னியர்களுக்காக இன்னொரு ராதமாஸ் பிறக்க போவதில்லை. இனி முடிவு செய்ய வேண்டியது வன்னியர்கள் தான். வன்னியர்கள் வேறு கட்சியில் இருந்தாலும் சரி, பாமகவுக்கு வர வேண்டாம்- வாக்கு மட்டும் பாமகவுக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

தமிழருக்காக குரல்
நாள்தோறும் அறிக்கை வெளியிடுகிறேன், அதில் வன்னியர்களுக்காக மட்டுமா அறிக்கை வெளியிடுகிறேன், ஒட்டு மொத்த தமிழக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன். இத்தனை காலமாக அனைவரையும் ஆதரித்துவிட்டீர்கள், ஒரு முறை அன்புமணியை ஆதரியுங்கள். பிற கட்சி வன்னியர்களை சந்தித்து ஆதரவு திரட்டுங்கள், பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை கொண்டு வரவேண்டும், அதற்க்காக வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெற செய்யுங்கள். திண்டிவனத்தில் பிறந்திருந்தாலும் சேலம்தான் எனக்கு மிகவும் பிடித்த ஊர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில்தான் தருமபுரியும் இருந்தது. இந்த இரண்டு மாவட்டங்களுக்கு வருவது என்றால் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக தலைவர் கோ.க மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications