ED, மோடி எதற்கும் பயப்பட மாட்டோம்.. திமுக தொண்டனின் கைக்குழந்தை கூட பயப்படாது.. உதயநிதி ஸ்டாலின்
சேலம்: திமுகவை ஈடி, ஐடி ரெய்டு, சிபிஐ-களை வைத்து பயமுறுத்த நினைக்கிறாங்க என்றும், நாங்க ஈடிக்கும் பயப்பட மாட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்றும் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திமுக இளைஞர் அணியின் 2 வது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடைபெற்றது. சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரமாண்டமாக இந்த மாநாடு நடைபெற்றது. முதலில் டிசம்பர் மாதம் இந்த மாநாடு நடக்க இருந்தது. ஆனால் சென்னையில் மழை வெள்ளம் பின்னர் தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் என இந்த மாநாடு நடக்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று திமுக இளைஞர் அணியின் 2 வது மாநில மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது. மாநாட்டிற்காக பிரம்மாண்ட மேடை போடப்பட்டது. மேலும், பந்தல்கள், சேர்கள் எனப் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு தலைவர்கள் நேற்றைய தினமே சேலத்திற்குச் சென்றடைந்து விட்டனர். நேற்று மாலை டிரோன் நிகழ்ச்சி ஒத்திகையும் நடந்தது.

இன்று காலை திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி இந்த மாநாட்டைக் கொடி ஏற்றித் தொடங்கி வைத்தார். மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடந்த இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் திமுகவினர் குவிந்திருந்தனர். தொடர்ந்து மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவை ஈடி, ஐடி ரெய்டு, சிபிஐ-களை வைத்து பயமுறுத்த நினைக்கிறாங்க என்றும், நாங்க ஈடிக்கும் பயப்பட மாட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று பேசினார். உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நாம் கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரியாக கட்டியிருக்கிறோம். ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி தந்தது 2 லட்சம் கோடி தான். இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன். இந்த முயற்சியை 2000 வருடமாய் முயற்சி செய்கிறீர்கள்.. ஆனால் உங்களால் இதுவரை தமிழகத்தில் கால் வைக்க முடியவில்லை. இந்த முயற்சியால் இன்னும் 2000 வருசம் ஆனாலும் வெற்றி பெற முடியாது. தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள்.
உங்கள் எண்ணத்தை ஒருபோதும் திமுக அனுமதிக்காது. ஏனென்றால் இந்த இயக்கத்தை தற்போது வழிநடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாபெரும் தலைவர். அதேபோல் இந்த இயக்கத்தை பயமுறத்த நினைக்கிறார்கள். ஈடி, ஐடி ரெய்டு, சிபிஐ வைத்து பயமுறுத்த நினைக்கிறாங்க. நான் பல முறை சொல்லியிருக்கிறேன். ஈடிக்கும் பயப்பட மாட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம்.
உங்கள் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் திமுக தொண்டன் இல்ல.. திமுக தொண்டனின் கைக்குழந்தை கூட பயப்படாது. அதற்கு காரணம் நமக்கு கிடைத்திருக்க கூடிய தலைவர் ஸ்டாலின் தான். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் மொத்த அடையாளம் நம் தலைவர் தான். திமுக என்றைக்கும் தொண்டர்களை கைவிட்டது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications