கோமாளி போல் உளறுகிறார்.. பசும்பொன் வந்தால் எதிர்ப்போம்.. எடப்பாடி பழனிசாமி மீது பாயும் புகழேந்தி!
சேலம்: எடப்பாடி பழனிசாமி கோமாளி போல் உளறி வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் காரணமாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தொண்டர்களின் பலம் யாருக்கு என்பதில் இரு தரப்பும் தொடர்ந்து மோதி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளில் ஓபிஎஸ் அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதோடு, புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கான நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்துள்ளார்.

புகழேந்தி பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து புகழேந்தி கூறுகையில், சேலம் மாவட்டத்திற்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதனால் அனைவரும் பேரணியாக வந்து தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

ஜெயக்குமார் மீது விமர்சனம்
தொடர்ந்து சட்டமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் அதிமுகவினரோடு இணைந்து அமரக் கூடாது என்ற ஜெயக்குமாரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜெயக்குமார் அதிகம் உளற தொடங்கியுள்ளார். ஜெயக்குமார் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். எம்எல்ஏ-வாக கூட இல்லாத ஜெயக்குமார், ஓபிஎஸ் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி என் மீது அதிக கோபமாக இருக்கிறார்.

இபிஎஸ் ஒரு கோமாளி
சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கர்நாடகா மாநிலம் கோலாலம்பூரை புகழேந்தி கெடுத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். கோலாலம்பூர் என்பது மலேசியாவில் இருக்கிறது. அதனால் கொஞ்சம் தெரிந்துகொண்டு பேச வேண்டும். கோமாளி போல் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டு இருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மேலும் வளர்ச்சியடையும் என்று தெரிவித்தார்.

ஊழல்வாதி இபிஎஸ்
தொடர்ந்து, எந்த காலக்கட்டத்திலும் மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி ஒரு ஊழல்வாதி. பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அதனால் எடப்பாடி பழனிசாமியை பார்க்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார் என்று கூறினார்.

தென் மாவட்ட மக்கள்
தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கம் தங்கக்கவச விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பசும்பொன்னுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. ஊழல்வாதிகளுக்கு முத்துராமலிங்கம் பெயரை சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை. தென் மாவட்ட மக்கள் அதிமுகவுக்கு தான் ஆதரவளிப்பார்கள். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி, தென் மாவட்ட மக்களின் வெறுப்புக்கு ஆளானவர்.

எதிர்ப்பு தொடரும்
கடந்த முறையே பசும்பொன்னிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. அவர் பசும்பொன் வந்தால், எதிர்ப்பு தொடரும். அதுமட்டுமல்லாமல் அவர் அதிமுக பொதுச்செயலாளராக வர முடியாது. எங்களின் எதிரி எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், ஜெயக்குமார் மட்டும்தான். விரைவில் அதிமுகவின் மற்ற தலைவர்கள் அனைவரும் ஓபிஎஸ் பின் வருவார்கள்.












Click it and Unblock the Notifications