ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்களா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
சேலம்: ராமர் கோயில் கட்டிவிட்டதால் மக்கள் அனைவரும் அவர்களின் பின்னால் சென்றுவிடுவார்கள் என்பது தவறான கருத்து என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பங்கேற்கவில்லை. பாஜக உடனான கூட்டணி முறிவு காரணமாக ஈபிஎஸ் அயோத்தி செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அயோத்தி ராமர் கோவில் திறப்பு, லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான அலையை ஏற்படுத்தும் என்ற பேச்சுகள் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளன.

இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கோவில் கட்டியதால் மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். நான் முதலமைச்சராக நான் இருந்தபோது ஏராளமான கோவில்களை கட்டியுள்ளோம், புணரமைத்துள்ளோம். தேவாலயங்களுக்கு, மசூதிகளுக்கு பழுது பார்க்க சிறப்பு நிதி கொடுத்தோம். அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம்.
ராமர் கோவிலை திறந்ததால் எல்லோரும் மோடி பக்கம் செல்வார்கள் என்பது தவறான கருத்து. சேலம் மாவட்டத்தில் எத்தனை கோவில்களை கட்டி இருக்கிறோம். எடப்பாடி தொகுதியில் எத்தனை கோவில்களை கட்டியுள்ளோம். அப்படி கோவில் கட்டினால் மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் எல்லோரும் கோவில் கட்டும் வேலைக்கு போய்விடுவார்கள்.

இந்திய நாடு சாதி மத பேதமற்ற அமைப்பு. அவரவர்களுக்கு பிரியப்பட்ட கடவுளை வணங்குகின்றனர். ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும், அவரவர் விருப்பப்பட்ட ஆலயங்களை கட்டுகிறார்கள். ஒரு கோவிலை கட்டிவிட்டால் அவர்களுக்கே ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி ஓட்டு போட்டால், அதிமுக எடப்பாடியில் எப்போதுமே போட்டியின்றி வெற்றி பெற்றுவிடும். அத்தனை கோவில்களை கட்டிக் கொடுத்துள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்கள் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு முறையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் அவசர கதியில் பேருந்து நிலையத்தைத் திறந்ததால் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
அண்மையில் சேலத்தில் நடைபெற்று முடிந்த திமுக இளைஞரணி மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், "திமுக இளைஞரணி மாநில மாநாடு அவர்கள், எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை. 5 லட்சம் பேர் வரை அந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஒன்றரை இலட்சத்திற்கும் குறைவான தொண்டர்கள் மட்டுமே மாநாட்டிற்கு வந்தனர். அதனால் திடலில் போடப்பட்டிருந்த பெரும்பாலான இருக்கைகள் கலியாக இருந்தது. மதுரையில் நாங்கள் நடத்திய அதிமுக மாநாட்டில் இதுவரை எந்த கட்சியிலும் இல்லாத வகையில் 15 லட்சம் பேர் குவிந்தனர்." என்றார்.
திமுகவின் நீட் தேர்வு ரத்து கோரி கையெழுத்து இயக்கம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில், ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வதற்காகப் போடப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை ஏராளமான கையெழுத்துக்கள் போட்டும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியவில்லை. திமுகவினர் பொதுமக்களிடம் பெற்ற 50 லட்சம் கையெழுத்து அட்டைகள் வீணாகக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications