பின்வாங்க மாட்டேன்.. என்ன பண்ணனும்னு தெரியும்! உறுதியாக சொன்ன எடப்பாடி.. களமிறங்கும் பெரிய டீம்!
சேலம்: அதிமுகவில் இந்த முறை எப்படியாவது ஒற்றை தலைமையை பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறைகளை போல இந்த முறை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவித்துள்ளனர். என்ன நடக்கும்? என்ன முடிவு எடுக்க போகிறார் எடப்பாடி என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் மேற்கொண்டதை ஓபிஎஸ் விரும்பவில்லை.
இந்த நிலையில் மீண்டும் தர்மயுத்தம் 2.0 போல இரவோடு இரவாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளை மீடியா முன் நேற்று பேசி இருக்கிறார். ஒற்றை தலைமை கூடாது என்று கட் அண்ட் ரைட்டாக உடைத்து பேசி உள்ளார்.

ஓபிஎஸ் பேட்டி
இந்த நிலையில் நேற்று ஓபிஎஸ் பேட்டிக்கு பின்பாக இரவு நிர்வாகிகளை சந்தித்த எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறாராம். இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவரிடம் பேசியதில், எடப்பாடி இந்த முறை உறுதியாக இருக்கிறார். கண்டிப்பாக ஒற்றை தலைமையை பெற வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார். 2024 லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும். அதற்கு இப்போதே கட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

எடப்பாடி உறுதி
இப்போது விட்டுவிட்டால் பிடிக்க முடியாது என்பது அவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் எப்போதும் டெல்லி தலையிடும். ஆனால் இந்த முறை டெல்லி தலையிடவில்லை. முன்பெல்லாம் இறுதி முடிவு டெல்லி கையில் இருக்கும். அவர்கள் போட்டுத்தரும் பாதையை வைத்து முடிவை எடுப்போம். ஆனால் இப்போது டெல்லி தலையிடவில்லை என்பதால் சுதந்திரமாக தனக்கு சாதகமாக முடிவு எடுக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள் நெருக்கமான வட்டாரத்தினர்.

ரத்தத்தின் ரத்தங்கள்
ரத்தத்தின் ரத்தங்கள் கூற்றுப்படி எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 60 + இடங்களை வென்றது. இதற்கு காரணம் கொங்கு மண்டல வெற்றிதான். அதற்கு தான்தான் காரணம் என்று எடப்பாடி கருதுகிறார். கட்சியின் முகமாக இப்போது நான்தான் இருக்கிறேன். இப்படி இருக்க இரட்டை தலைமை ஏன்? இரட்டை தலைமையால் கட்சி வலிமை இழக்கிறது.

பாஜக இல்லை
பாஜக எல்லாம் தன்னை எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டு சுற்றுகிறது. ஓபிஎஸ்சுக்கு தேவை என்றால் அவை தலைவர் பதவி, தங்களின் இரண்டு மகனுக்கும் எம்பி, எம்எல்ஏ பதவிகளை பெற்றுக்கொள்ளட்டும். கட்சி தலைமை எனக்குத்தான் வேண்டும். கட்சி மாவட்ட செயலாளர்கள் 90 சதவிகிதம் பேர் என் பக்கம்தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எப்படி.. அவர் தலைமைக்கு வர முயலலாம் என்று நேற்று நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக பேசி இருக்கிறாராம். அதனால் இந்த முறை கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்கிறார்கள்.

பெரிய டீம்
அதன் ஒரு கட்டமாக இன்றில் இருந்தே மாவட்ட செயலாளர்களை தனக்கு ஆதரவாக களமிறங்க சொல்லி இருக்கிறார் எடப்பாடி என்று கூறப்படுகிறது. அதாவது கொங்கு மண்டலம், தென் மண்டலம் உட்பட அனைத்து மண்டலங்களிலும் தனக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர்களை களமிறங்க சொல்லி இருக்கிறாராம். இதனால் இன்றில் இருந்தே அவருக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்கிறார்கள். அதோடு ஓபிஎஸ்ஸிடம் சமாதானம் செய்யும் விதமாக தனது டீமில் உள்ள முக்குலத்தோர் பிரிவு தலைவர்களை களமிறங்க சொல்லி இருக்கிறாராம். இந்த பெரிய டீம் ஓபிஎஸ்ஸிடம் சமாதான பேச்சுவார்த்தைகளை செய்ய களமிறங்கும் என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications