"அந்தப் பேச்சுக்கே வேலை இல்லை”.. எஸ்.பி வேலுமணி கருத்தை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!
சேலம்: பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் அதிமுக 35 இடங்கள் வரை வென்றிருக்கும் என எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு எடப்பாடி மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் வென்ற அதிமுகவுக்கு, இம்முறை ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணி 12 தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மதுரை, கோவை, நெல்லை, தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி 2வது இடத்திற்கு முன்னேறி, அதிமுகவை 3வது இடத்துக்கு தள்ளி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுக வேட்பாளர்கள் 7 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட கோவையிலேயே அக்கட்சி 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
எடப்பாடி பேட்டி: இந்நிலையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர், "ஆட்சி, அதிகார பலம், பண பலத்தை வைத்து பல கட்சிகள் பிரச்சாரம் செய்தன. கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தனர். அதிமுகவை பொறுத்தவரை நான் ஒருவர் மட்டுமே எல்லா இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தேன்.
பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்து விட்டதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. 2014ல் பாஜக கூட்டணி 18.80% வாக்குகளைப் பெற்றது. அதைக் காட்டிலும் தற்போது 0.62% வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது பாஜக. அதிமுகவை பொறுத்தவரை 2019 தேர்தலை விட ஒரு சதவிகிதம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளோம். சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றதால் தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது" எனத் தெரிவித்தார்.
அந்த பேச்சுக்கே இடமில்லை: மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "பாஜக உடன் கூட்டணியில் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என நடந்து முடிந்ததைப் பற்றி பேசக்கூடாது. தேர்தலைப் பொறுத்தவரை இருந்திருந்தால், வந்திருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார். அந்தக் கனவுகள் பலிக்கவில்லை என்பதால் விரக்தியில் பேசுகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தபோது அண்ணாமலையை அடையாளம் காட்டியதே எங்கள் கட்சி தான். எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு கட்சிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்பி வேலுமணி கருத்துக்கு மறைமுக எதிர்ப்பு: "அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அண்ணாமலைதான் காரணம். அதே கூட்டணி தொடர்ந்து இருந்தால் இந்த லோக்சபா தேர்தலில் நாங்கள் 30 முதல் 35 சீட்களில் வெற்றி பெற்றிருப்போம்" என்று எஸ்பி வேலுமணி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், "தேர்தலைப் பொறுத்தவரை இருந்திருந்தால், வந்திருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை." எனக் கூறி எஸ்பி வேலுமணியின் கருத்துக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications