ரகசியம் இருக்குனு சொன்னாரே உதயநிதி.. அது என்ன ஆச்சு? நீட் விவகாரத்தில்.. திமுகவை சீண்டும் இபிஎஸ்
சேலம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வரும் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் பிப். 22இல் அறிவிக்கப்பட உள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

அதிமுக
கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாகப் பயணித்து வந்த அதிமுக மற்றும் பாஜக இந்த முறை தனித்தனியாகப் போட்டியிடுகிறது. அதிமுகவின் மற்ற கூட்டணிக் கட்சிகளான இதர கட்சிகள் சென்னை மாநகராட்சியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக். மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த முறை பக்காவான வியூகம் அமைத்துப் போட்டியிடுகிறது அதிமுக.

திட்டம்
கடந்த 9 மாத திமுக ஆட்சியில் உள்ள குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல அதிமுக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நீட் விலக்கு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பின் தரம் தொடர்பான விஷயங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை உடன் வேட்பு மனுத் தாக்கல் முடிந்த நிலையில், பிரசார பணிகளை அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இபிஎஸ் அட்டாக்
அதன்படி நீட் விவகாரத்தில் நேரடியாக திமுகவையும் உதயநிதியையும் சாடி பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வனவாசி பகுதியில், அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

மக்களை ஏமாற்றினர்
அங்குப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "வார்த்தை ஜாலங்கள் மூலம் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார். திமுக என்றாலே தில்லு முள்ளு செய்யக்கூடிய கட்சி தான். அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும். கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்திலேயே பொய்யான கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து அவர்கள் மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்தனர். ஆனால், இப்போது அவர்கள் மக்களையே மறந்துவிட்டனர்.

ஒரு திட்டமும் இல்லை
கடந்த 8 மாதங்களாக திமுக ஆட்சி செய்த ஒரு திட்டத்தைக் கூற முடியுமா? முதல்வரின் சைக்கிள் பயணம், நடைப்பயிற்சி, டீக்கடை வீடியோக்களை தான் பார்க்க முடிகிறதே தவிர, பொதுமக்களுக்கு இவர்கள் நன்மை செய்யும் காட்சிகளைப் பார்க்க முடிவதில்லை. கூட்டுக்குடிநீர் திட்டம், அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து, வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் என்று அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எனது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை, இப்போது முடக்கி வைத்துள்ளனர்..

நீட் விவகாரம்
கிரம மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். இதன் மூலம் 574 அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எடப்பாடி தொகுதியில் மட்டும் 15 மாணவர்களும் சேலம் மாவட்டத்தில் இருந்து 75 மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். சட்டசபைத் தேர்தல் சமயத்தில் நீட் குறித்து அவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள்.

அந்த ரகசியம் என்னாச்சு
திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனப் பொய்யான வாக்குறுதி அளித்தார்கள். குறிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினாரே. அந்த ரகசியத்தைப் பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்திருக்கலாமா. ஏன் செய்யவில்லை? பொதுமக்கள் இப்போது அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications