சொல்லாமல் அணையை திறந்த அரசு..திறமையற்ற முதல்வரால் தூங்காமல் விழித்திருக்கும் மக்கள்! எடப்பாடி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தவுடன் உரிய முன் எச்சரிக்கையை திமுக அரசு எடுத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும், தென்பெண்ணையாற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் கந்தப்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை சூழ்ந்து நின்ற மழை வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வருகை தந்து பார்வையிட்டார்.

edappadi palaniswami salem mk stalin

குறிப்பாக வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு தண்ணீர் நின்ற இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். மேலும் தண்ணீர் சிக்கிய வாகனங்களின் நிலை மற்றும் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் செல்லும் வழித்தடங்களையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பெஞ்சல் புயலால் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு நிதி கோரப்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு மத்திய அரசை அணுகி நிதி பெற முயற்சிக்க வேண்டும்.

தென்பெண்ணையாற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருமணிமுத்தாற்றில் முறையாக தூர்வாராத காரணத்தால் தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. திமுக அரசு, சேலம் மாநகராட்சி சரியாக செயல்படாத காரணத்தால் அடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் நகரத்திற்குள், குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது.
உரிய முறையில் முன் எச்சரிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

திருமணிமுத்தாற்றின் கரையோரம் இருக்கின்ற வீடுகளில் பல இடங்களில் மழை நீர் புகுந்துள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரங்கன் தெரு, மீனாட்சிபுரம், சிவதாபுரம் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலை வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தை தாண்டி மழை வெள்ளம் செல்லக்கூடிய நிலை உள்ளது. அல்லிக்குட்டை, கொண்டலாம்பட்டி பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த நீர், சேலம் மாநகரத்தில் பெய்த மழைநீர் காரணமாக இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்காடு மலைப்பகுதியில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை அரசு போர்க்கால அடிப்படையில் அதை சரிசெய்ய வேண்டும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் வேகமாக, துரிதமாக மண்ணை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும். மேலும் ஏற்காட்டில் 22 கிராமங்களுக்கு செல்லக்கூடிய தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புளியங்கடை கிராமத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெஞ்சல் புயலால், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் மழை பாதிப்பு உள்ளது. வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தவுடன் உரிய முன் எச்சரிக்கையை திமுக அரசு எடுத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

நேற்று முன்தினம் சாத்தூர் அணையில் இரவு 2 மணிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்து விட்டு விட்டனர். தொலைக்காட்சியிலோ, நாளிதழ்களிலோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பொதுமக்களுக்கு அறிவிப்பும் இல்லை. தென்பெண்ணையாற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், தென்பெண்ணையாற்றின் கரை உடைந்ததால் விழுப்புரம் நகரில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. உரிய முன் எச்சரிக்கை விடுக்காத, திறமையற்ற முதலமைச்சர் ஆண்டு கொண்டிருப்பதால் பொதுமக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அணைகளில் தண்ணீர் திறக்கும்போது உரிய எச்சரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்களது உடைமைகளுடன் செல்ல முடியும். ஆனால் அரசின் அலட்சியத்தால் தென்பெண்ணையாற்றுக் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடுமையான கண்டனத்துக்குரியது.
ஒவ்வொரு முறையும் புயல் வரும்போது மத்திய அரசிடம் நிதி கோரப்படுகிறது. அந்த வகையில் பெஞ்சல் புயலால் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு நிதி கோரப்பட்டுள்ளது. இதை கணக்கிட்டு மத்திய அரசை அணுகி நிதி பெற முயற்சிக்க வேண்டும்.

பொதுமக்கள் மழை வெள்ளத்தில் எப்போது நீர் வீட்டிற்குள் புகுமோ என இரவில் கூட அச்சத்தில் விழித்துள்ளனர். திறமையற்ற முதலமைச்சரால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தூங்காமல் விழித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+