உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!
சேலம்: ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்திருந்தால் மொத்தமாக விற்பனை செய்திருப்பார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஓபிஎஸ்ஸை பி டீமாக்கி அதிமுகவை உடைக்க முயற்சித்தது திமுக என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் ஒவ்வொரு நாளும் தனிமனித விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக விமர்சித்து எல்லை மீறினார். இதனை 2019 லோக்சபா தேர்தலின் போதே எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை, பால்டாயில் குடித்து போயிருக்க வேண்டும்.. இருந்து கொண்டு நம் உயிரை வாங்குவதாக பேசி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது அதிமுகவினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை "அந்த ஆள்" என்று ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஏற்கனவே முக்குலத்தோர் சமூக மக்கள் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் சூழலில், ஓபிஎஸ்ஸை ஒருமையில் விமர்சித்திருப்பது விவாதமாகி இருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யக் கூடியவராம்.. யாருக்கு துரோகம் செய்தோம்? எங்கள் கட்சியில் இருந்தவர்களை பி டீமாக்கி அதிமுகவை உடைக்க நினைத்த திமுகவே துரோகி.
நம்மிடம் இருந்தவர் எங்கு இருக்கிறார். அதிமுகவில் ஓபிஎஸ்க்கு எவ்வளவு மரியாதை கொடுத்தோம். ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். துணை முதல்வர் பதவி கொடுத்தோம். அவரை பி டீமாக்கி கட்சியை உடைக்க நினைத்த துரோகிகள்.. உன்னை கட்சியில் சேர்த்திருந்தால், அதிமுகவையே விற்பனை செய்துவிட்டு போயிருப்பீர்கள்.
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா மன்னிக்காது என்று விமர்சித்துள்ளார். அதேபோல் தென் மாவட்டங்களில் பிரச்சாரங்களில் பங்கேற்ற போது எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் தொடர்பாக வாய் திறக்கவில்லை. தற்போது சொந்த ஊரில் வைத்து ஓபிஎஸ்ஸை விமர்சித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications