எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு!
சேலம்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு, திமுகவில் இணைந்துவிட்டார். ஏற்காடு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் இளையக்கண்ணு.
2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஏற்காடு தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தார். எடப்பாடி பழனிசாமி மீது இளையக்கண்ணுவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், சேலத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு தலைமையேற்றது முதல் பலருக்கு அதிருப்தியே நிலவி வருகிறது. அதிமுகவின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கும் இது போல் அதிருப்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதை சில முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தும் அவர் கேட்டு கொண்ட பாடில்லை.
ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்ததால் ஓபிஎஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தென் மாவட்டங்களில் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள ஓபிஎஸ் உள்ளிட்டோரின் ஆதரவு தேவை என பலர் அறிவுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை என்கிறார்கள்.
இதையடுத்து செங்கோட்டையனும் ஒருங்கிணைந்த அதிமுக என்ற கருத்தை வலியுறுத்தினார். அதையும் எடப்பாடி பழனிசாமி ஏற்காமல் அவரை கட்சியில் இருந்து நீக்கினார். தற்போது செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். அது போல் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். ஜேசிடி பிரபாகரன், தனபால் மகன் லோகேஷ், சுப்புரத்தினம், வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துவிட்டனர்.
இப்படியாக எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி காரணமாக பலர் அதிமுகவில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைகிறார்கள். தேர்தல் நேரத்தில் இது போல் நடப்பது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை அவர் உணரவில்லை என்கிறார்கள். அது போல் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததையும் யாரும் விரும்பவில்லை. இதை பலரும் எதிர்க்கிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கூட பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் விசுவாசமுள்ள தொண்டர்களையும் எடப்பாடி பழனிசாமி தக்க வைத்துக் கொள்ளாமல் பிடிவாதம் பிடிப்பதாக பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவில் இருந்து இன்னும் சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைய போகிறார்கள் என சிலர் கூறி வருகிறார்கள். அது போல் தவெகவுக்கு வர போவதாக செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூறி வருகிறார்கள். இனியும் அதிமுக சுதாரித்துக் கொள்ளாவிட்டால் தனது உறுப்பினர்களை, விசுவாசிகளை இழக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அது போல் தமிழரசு, பாட்டாளி மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். ஓமலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தமிழரசு, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் திமுகவில் இருந்து இன்று விலகி, அதிமுகவில் , பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications