வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
சேலம்: முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து, ஜனநாயக கடமை ஆற்றினார்.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளார். வாக்களித்த பின்னர் தனது மையுடன் கூடிய விரலை உயர்த்திக் காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
தனது வாக்கை பதிவு செய்த பின்னர் வாக்குச்சாவடிக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications